SuperTopAds

இந்திய தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு யாழில் அஞ்சலி

ஆசிரியர் - Editor II
இந்திய தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு யாழில் அஞ்சலி

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் புதன்கிழமை காலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

அதன் போது, உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா , த. சித்தார்த்தன் , சுரேஷ் பிரேமச்சந்திரன் , உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்

அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபாகரசர்மாவின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று , செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது