இராணுவம், கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்!

இராணுவம், கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ளதோடு, விமானப்படை தளபதியின் சேவை நீடிப்பு அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது.
அதற்கமைய நாளை புதன்கிழமை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஓய்வையடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேலும் கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட கடற்படையின் 26 ஆவது தளபதியாக பதவியேற்க உள்ளார்.
பண்டாரவளை எஸ். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான ரியர் அட்மிரல் பனாகொட, 1989ஆம் ஆண்டு நிறைவேற்றுப் பிரிவின் 19ஆவது உள்வாங்கலின் கெடட் அதிகாரியாக கடற்படையில் சேர்ந்தார். இதேவேளை விமானப்படையின் தற்போதைய தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கான பாரம்பரிய அணிவகுப்பை இலங்கை இராணுவம் நேற்று திங்கட்கிழமை நடத்தியது. மேலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ, விமானப்படை அல்லது கடற்படைத் தளபதி ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.