சட்டத்தரணி நிசாம் காரியப்பின் நூலிற்கு கண்டனம்

ஆசிரியர் - Editor III
சட்டத்தரணி நிசாம் காரியப்பின் நூலிற்கு கண்டனம்

'அந்த கல்முனைக்குடி நாட்கள் ' என்ற தலைப்பில் வெளியிடும் நூலிற்கு கண்டனம் தெரிவிப்பு


கல்முனை என்ற எமது ஊரினை கல்முனை குடி என்று பிரித்து வரலாற்றை திரிவுபடுத்த இடமளிக்க வேண்டாம் என  கல்முனை சிவில் சமூக கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று (20) அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் அந்த கல்முனைக்குடி நாட்கள் ' என்ற தலைப்பில் நூல் வெளியீடு தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.


மேலும் தெரிவித்ததாவது



தாங்கள் எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 20, 2024 ஆம் திகதி "அந்த கல்முனைக்குடி நாட்கள் " என்ற தலைப்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நீங்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக கல்முனையின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் அறிகின்றோம்.

மேலும், கல்முனையின் நிருவாக ஆளுகை மற்றும் நிருவாகப் பரப்பை அபகரிப்பது தொடர்பில் கல்முனை தமிழ் தரப்பினர் இனரீதியான "கல்முனை உப பிரதேச செயலகம்" ஒன்றை கோரி நிற்பதும் கல்முனை முஸ்லிம்கள் அதனை சட்டவிரோத கோரிக்கை என்று சொல்லி தொடர்ச்சியாக மறுத்துவருவதும், இது தொடர்பில் மூன்று வழக்குகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மூன்று வழக்குகள் தொடருகின்றன .

இருப்பினும், எமது மண்ணின் பூர்வீக குடிகளில் ஒருவராகிய நீங்கள் கல்முனையில் பிறக்கின்றபோதே, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கல்முனை தாளவாட்டுவான் வீதி மற்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதிகளால் எல்லைப்படுத்தப்பட்டு கல்முனை என்று பெயரிடப்பட்ட கல்முனை பட்டினத்தின் ஏழு வட்டாரங்களில் ஒன்றான ஐந்தாம் வடடாரத்தில்தான் பிறந்தீர்கள் என்பதற்கு நீங்களும் இந்த மண்ணின் பூர்வீக குடிகளாகிய நாங்களும் சாட்சி.

துரதிர்ஷ்ட வசமாக தமிழர் தரப்பினரின் கோரிக்கையில் கல்முனையில் 99% தமிழர்களே வாழ்வதாகவும் கல்முனை அவர்களின் பூர்வீக பிரதேசம் என்றும் வாதிட்டு வருகிறார்கள் என்பதையும், அந்த கோரிக்கையின் பாரதூரமானது கல்முனையின் பூர்விக குடிகளாகிய எம்மை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதும் தலைசிறந்த சட்டத்தரணியான நீங்கள் அறியாத ஒன்றல்ல.

அவர்களின் இந்த நச்சுத்தன்மையான கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் இலங்கையின் தலை நகரில் ஒரு சர்வதேச விருந்தினர்களுடன் இந்த புத்தகத்தை நீங்கள் வெளியிட முனைவதானது கல்முனை என்ற முஸ்லிம்களின் பூர்வீக நிலத்தை கல்முனைக்குடி என்று நாமம் சூட்டும் விழாவாக நீங்கள் கொண்டாட எத்தனிக்கும் ஒரு துரோகச் செயலாகவே நாங்கள் கருதுகிறோம்.

இவை அனைத்தும் அறிந்திருந்தும் நீங்கள் வெளியிட இருக்கும் இந்த புத்தகம் அல்லது நீங்கள் நாமம் சூட்ட முயற்சிக்கும் 'கல்முனைக்குடி" என்ற நாமம். சமகாலத்தில் பாரிய சர்ச்சைக்குரிய விடயம் என்பதை நீங்கள் விளங்கியிருந்தும், குறித்த புத்தகம் இந்த பெயரில் வெளியிடப்படும் பட்சத்தில் அது ஒரு ஆவணமாக கொள்ளப்பட்டு எமது இருப்பு தொடர்பில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை.

எனவே உடனடியாக வெளியிட இருக்கும் புத்தகத்தின் பெயரை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அதற்கான அவகாசம் போதாது என்று நீங்கள் கருதும் பட்சத்தில் இந்த வெளியீட்டு விழாவை இன்னுமொரு தினத்திற்கு மாற்றியாவது இந்த திருத்தத்தை மேற்கொள்ள முடியும்.

எனவே, எமது அதிருப்தியையும் கண்டனத்தையும் இத்தால் தெரிவிப்பதோடு அந்த கல்முனைக்குடி நாட்கள்" என்ற புத்தகத்தின் தலைப்பானது நாங்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் கல்முனையின் பூர்வீகம் நிருவாகம் அபிவிருத்தி அடையாளம் மற்றும் ஆளுமை தொடர்பான அச்சுறுத்தல் மட்டுமல்லாது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் தென்கிழக்கின் முகவெற்றிலை கல்முனை என்ற எண்ணக்கருவிற்கு சவாலான ஒன்றாகும் என்பதை கருத்திற் கொண்டு, இந்தக் கோரிக்கைக்கு செவிமடுத்து உடனடியாக தலைப்பில் மாற்றத்தை செய்வீர்கள் என்று, உலமாக்கள் பள்ளிவாசல் பிரமுகர்கள் புத்திஜீவிகள் வர்த்தகர்கள் இளைஞர்கள் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கலாக கல்முனையின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.



குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் ஹமீட் எஸ்.லெப்பை கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிச் செயலாளர் எம்.எச்.ஏ  கரீம்(பி.ஏ)  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கல்முனை நகர் அமைப்பாளருமான பி.ரி.ஜமால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு