குருந்துார் - வெடுக்குநாறியில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்துவதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்படும் - விதுர விக்ரமநாயக்க

ஆசிரியர் - Editor I
குருந்துார் - வெடுக்குநாறியில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்துவதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்படும் - விதுர விக்ரமநாயக்க

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நேற்றுமுன்தினம் (23) நல்லை ஆதீனத்துக்கு சென்று, அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சிவபூமி அறக்கட்டளை அமைப்பாளர் கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஷிதொண்டுநாத சுவாமிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலையில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு வகை செய்தல், காங்கேசன்துறையில் உள்ள ஆச்சிரமத்தின் காணி விடுவிப்பு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலுள்ள பெட்டிக்கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்து சமய தலைவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை என்பன தொல்பொருள் திணைக்களக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பினும் அனைத்து மதத்தவர்களும் பாரபட்சமின்றி சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக உறுதியளித்தார்.

மேலும், திருகோணமலையில் உள்ள சிறு கடைகளை அகற்றல் மற்றும் காங்கேசன்துறையில் உள்ள சைவாச்சிரமத்தின் காணி விடுவிப்பு தொடர்பிலும் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு