தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவருக்கும் சிலை! அவர்களின் கனவுகளையும் வென்றெடுப்பேன் - டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவருக்கும் சிலை! அவர்களின் கனவுகளையும் வென்றெடுப்பேன் - டக்ளஸ்..

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இயக்கங்களின் தலைவர்கள் தமிழ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுவட்டப் பகுதியை சுற்றி சிலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் சிலைக்கு உரியவர்களின் கனவுகளையும் வென்றெடுப்பேன் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், எம்மிடையே இருக்கும் தேசிய நல்லிணக்கமும் அதனூடான அணுகுமுறைகளும் மட்டுமல்லாது எமது தற்துணிவுமே இன்று யாழ் மாவட்டத்தில் எமது இனத்தின் வரலாற்றை சொல்லும் மன்னர்கள் பலரது சிலைகளும் வரலாற்று சான்றுகளும் கட்டடங்களும் நிறுவப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கின்றது. 

 குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்களது கனவுகளும் நிறைவேற வேண்டும். அதேபோன்று அவர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகளும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவது அவசியமாகும். இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை.

ஏற்கனவே உரும்பிராயிலுள்ள பொன்சிவகுமாரன், சிலை யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்திலுள்ள தமிழ் தேசத்தை ஆண்ட மன்னர்களது முச்சிலைகள், முத்திரைச் சந்தியிலுள்ள சங்கிலியன் சிலை, யாழ்.மடத்தடியிலுள்ள தனிநாயகம் அடிகளார் சிலை போன்றனவும் எமது அணுகுமுறையளால் தடைகளை தகர்த்து நிறுவப்பட்டுள்ளன.

இவற்றினூடாகவே எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு உண்மைத்தன்மையுடன் எடுத்துச் செல்லப்படுவதற்கான வழிமுறையாக அமையும் என நினைக்கின்றேன். அதனடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட நினைவுகூரப்பட வேண்டிய தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் உள்ளனர். 

அவர்களது நினைவேந்தல்களை இயக்க வேறுபாடுகள் இன்றி, சிலைகளை அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பார்த்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு