யாழில் கைதான போலி வைத்தியர் பெண்களை மிரட்டி பணம் பெற்றமை உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்...

ஆசிரியர் - Editor I
யாழில் கைதான போலி வைத்தியர் பெண்களை மிரட்டி பணம் பெற்றமை உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்...

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்,நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளமையுடன். வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி , பல இலட்ச ரூபாய்களை பெற்று வந்துள்ளான்.

அத்துடன் இளைஞனிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் காணொளிகள் உள்ளதாகவும் பொலிஸ் விசரணைகளில் தெரியவந்துள்ளது. 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்தி , அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த இளைஞனை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நகர் பகுதியில் அதிசொகுசு காரில் இளைஞன் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட வேளை இளைஞன் 15 பவுண் நகையை அணிந்திருந்ததுடன் , 5 இலட்ச ரூபாய் பணத்தினை செலவுக்கு என வைத்திருந்துள்ளார். 

அத்துடன் 05 அதிநவீன தொலைபேசிகள் , பல வங்கி அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டு இருந்தனர். இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள் , காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

இளைஞன் தனித்து குறித்த மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும் , இவருக்கு பின்னால் பெரும் கும்பல் ஒன்று மோசடிக்கு உதவி புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

அதேவேளை இளைஞனின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை ஆராய்ந்து , இளைஞன் யார் யாருடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பண பரிமாற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து , 

தொடர்புடைய நபர்களை விசாரணை வலயத்திற்குள் எடுத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை மன்று இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு