கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்

ஆசிரியர் - Editor III
கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்

கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்

கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்.அம்பாறை தமிழ் தேச வரைபடத்தில் இருந்து நீக்கப்படும்.ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது  நாளாக இன்று(7)     கவனயீர்ப்பு  பேரணியுடள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அங்கு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 34 வருடங்களாக ஒரு சுயாதீனமான பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது.ஆனால் இங்கு ஒரு தனியான பிரதேச செயலாளர் என்று ஒருவர் இல்லை.இது இலங்கையின் ஆச்சரியங்களில் ஒன்று.கணக்காளர் என்ற ஒருவர் இல்லை.கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஏதேச்சையான அதிகாரத்தினுள் சட்டவிரோத உத்தரவிற்கு கட்டுப்பட்டு தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் செயற்பட்டு கொண்டு இருக்கின்றது.இது அரச ஏதேச்சை அதிகாரமாகும்.

இது அரச பயங்கரவாதம்.1993.07.23 ஆந் திகதி இலங்கை அமைச்சரவையில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது ஒரு சுயாதீனமாக இயங்குகின்ற பிரதேச செயலகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் அமைச்சரவை தீர்மானத்தை மீறி இந்த அரசானது செயற்பட்டு கொண்டிருக்கின்றது.அரசாங்கம் செயற்பட்டு கொண்டு இருக்கின்றது.கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செயற்பட்டு கொண்டு இருக்கின்றார்.இது சட்டத்தை மீறிய செயற்பாடாகும்.ஒரு அமைச்சரவை தீர்மானத்தை மீறி எவ்வாறு கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செயற்பட முடியும்.இதை நாம் அனுமதிப்போமாயின் தமிழ் தேச வரைபடத்தில் இருந்து கல்முனை வடக்கு அகற்றப்படும்.

தமிழர் தாயகத்தில் இருந்து கல்முனை வடக்கு பறி போக போகின்றது.இது தான் அவர்களது சூழ்ச்சி.இது தான் அவர்களது நிகழ்ச்சி நிரல்.இந்த சதிக்கு எதிராகத் தான் இந்த மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.14 நாட்களாக இந்த மக்கள் போராடி வருகின்றார்கள்.இவர்களுக்கு இந்த நீதி கிடைக்கும் வரை மக்களோடு சேர்ந்து நாமும் போராடுவோம்.இது வெறுமனே கல்மனை வடக்கின் பிரச்சினை மாத்திரம் அல்ல.தமிழ் தேசத்தின் பிரச்சினை .கல்முனை வடக்கிற்கு நீதி கேட்டு தமிழ் தேசம் திரள வேண்டும்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி ,வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மக்கள் திரண்டு போராட வேண்டும்.கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்.அம்பாறை தமிழ் தேச வரைபடத்தில் இருந்து நீக்கப்படும்.

ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும்.நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள்.அந்த வழக்கினை மீறி கல்முனை வடக்கு பிரதேச செயகத்தை உப பிரதேச செயலகம் என கூறி கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.வழக்கினை தாக்கல் செய்தவர்கள்(தமிழ் தேசிய கூட்டமைப்பினர்)பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.ஏன் திருகோணமலையில் நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு தாக்கல் செய்த உங்களுக்கு இங்கு இவ்வாறு வழக்கு தாக்கல் ஒன்றினை நீதிமன்ற அவமதிப்பு என்று மேற்கொள்ள முடியாதா?முடியும்.ஆனால் எங்களது தலைவர்கள் கல்முனை வடக்கை சிங்கள பௌத்த பேரினவாதத்துடனும் சில அரசியல் தலைவர்களிடமும் விற்றுவிட்டார்கள்.

இதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.கல்முனை வடக்கிற்கு நீதி கிடைக்கின்ற வரை நாங்கள் போராடுவோம்.எங்களது கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.கல்முனை தெற்கு பிரதேச செயலாளரது அதிகாரங்கள் எமது பிரதேச செயலக எல்லையினுள் நிறுத்தப்பட வேண்டும்.நிறுத்தப்படுகின்ற வரை எமது போராட்டம் தொடரும்.கல்முனை வடக்கானது தமிழ் தேசத்தின் ஒரு பகுதி என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இங்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக தமிழ் தேசமாக நாங்கள் போராடுவோம்.நீதி கிடைக்கின்ற வரை எமது குரல்கள் ஓயப்போவது கிடையாது என மேலும் குறிப்பிட்டார்.

மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது  நாளாக இன்று    கவனயீர்ப்பு  பேரணியுடள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக  ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது பல்வேறு வடிவங்களில் தீர்வினை வலியுறுத்தி   பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக 14 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து பேரணியாக  போராட்டத்தை மக்கள்  தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம்   1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை   ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும்  திட்டமிடப்பட்டு  பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு  கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம்  பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால்   போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு