யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோது உயிரிழந்த மூதாட்டியின் பெருவிரலில் “மை” பூசப்பட்டது ஏன்? எப்படி? பொலிஸார் தீவிர விசாரணை...

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோது உயிரிழந்த மூதாட்டியின் பெருவிரலில் “மை” பூசப்பட்டது ஏன்? எப்படி? பொலிஸார் தீவிர விசாரணை...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் எனும் சந்தேகத்திலேயே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் இருந்து வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட , 

" தாயிடம் இருந்து சிலர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளார்" என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 

அதனை அடுத்து , பணிப்பாளர் சட்ட வைத்திய அதிகாரிக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார். அத்துடன் திடீர் மரண விசாரணை அதிகாரியும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

அதன்போது பெண்ணின் கை பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டுள்ளது, அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பொலிஸார் உயிரிழந்த பெண்ணை பராமரித்தவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை தாம் வைத்தியசாலையில் பெண்ணை அனுமதிக்கும்போது பெருவிரலில் மை அடையாளம் இல்லை எனவும் , 

பின்னர் எப்படி வந்தது என தமக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை , வெளிநாட்டில் வசிக்கும் உயிரிழந்த பெண்ணின் மகன் வைத்தியசாலைக்கு நேரில் வருகை தந்து பெண்ணை அடையாளம் காட்டிய பின்னரே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், 

அதுவரை சடலம் பிரேத அறையில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு