சோழா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த யாழ்ப்பாணம் - தென்மராட்சியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம்..

ஆசிரியர் - Editor I
சோழா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த யாழ்ப்பாணம் - தென்மராட்சியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம்..

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 

நேற்று (24) காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.

அதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்த சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இதன்போது வாகனத்தை இழுத்துவந்த செல்லையா திருச்செல்வத்தை ஆரம்பம் முதல் சாதனையை நிலைநாட்டும் வரையில் அமைச்சர் உற்சாகப்படுத்தி வந்தார். 

இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்து, பதக்கத்தையும் விருதையும் பட்டயத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களால் வழங்கிவைத்தனர்.

சாதனை நாயகனான செல்லையா திருச்செல்வம் (60) கடந்த பத்தாண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின் மீது வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்.

60 வயதான சாதனை நாயகன் அண்மையில் சாவகச்சேரி பஸ் நிலையத்தின் அருகில் 1550 கிலோ எடையுள்ள வாகனத்தை 1500 மீற்றர் தூரம் வரை 45 நிமிடங்களில் இழுத்து சாதனை படைத்துள்ளார். 

இந்நிகழ்வு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இம்முறை சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் செல்லையா திருச்செல்வத்தின் பெயரும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு