யாழ்.வட்டுக்கோட்டை இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறையுடன் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறையுடன் மீட்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில்  வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்பட்ட கார் இரத்த கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள், இரும்பு கம்பிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கார் நேற்று நள்ளிரவு வட்டுக்கோட்டை பகுதியில் சந்தேக நபரொருவரின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள காரை தடயவியல் பொலிஸார் சோதனை செய்ததுடன் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் நேற்று கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த வேளையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன்

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டநிலையில் இன்று மாலை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே உயிரிழந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு