வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு!

ஆசிரியர் - Editor I
வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு!

மின்கட்டணத்தை நேற்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு 

மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

லங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கோரலின் போது கிடைக்கப்பெற்ற யோசனைகளை கருத்திற் கொண்டு மொத்த மின்கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இத்திருத்தம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 

ஒரு அலகுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 08 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.31 -60 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா மின்கட்டணம் 300 ரூபாவாகவும் ஒரு அலகுக்கான கட்டணம் 30 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டதுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு