யாழ்.பல்கலைகழக 3ம் வருட - 2ம் வருட மாணவர்களுக்கிடையில் மோதல்! 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக 3ம் வருட - 2ம் வருட மாணவர்களுக்கிடையில் மோதல்! 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை..

யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத்தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, 3ம் வருட மாணவர்களால், 2ம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான 

மற்றும் முறை சார்ந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நான்கு பேருக்கும் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமையக் கடந்த 23 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கும், கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், 

பல்கலைக்கழகம் தொடர்புபட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதியின் உள்நுழைவுத் தடைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கலைவார நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மூன்றாம் வருட மாணவர்களுக்கும், இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி, கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் கைக்கலப்பாக மாறியுள்ளது. 

இந்தச் சம்பவத்தின்போது தலை மற்றும் தோள் பட்டைப் பகுதியில் உபாதைக்குள்ளான இரண்டாம் வருட மாணவன் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் நான்கு மாணவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், 

பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைவாகக் கலைப் பீடாதிபதியினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு