விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைதான 4 பெண்கள் உட்பட 21 பேர் நேற்று விடுதலை..!

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைதான 4 பெண்கள் உட்பட 21 பேர் நேற்று விடுதலை..!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டில் கடந்த 2014ம் ஆண்டு வடமாகாணத்திலும், கொழும்பிலும் கைது செய்யப்பட்டிருந்த 4 பெண்கள் உட்பட் 21 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றத்தினால் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 21 சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த 21 நபர்களும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வவுனியா,கிளிநொச்சி, பூசா ஆகிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறை கைதிகள் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடளாவிய ரீதியில் பல சாத்வீக போராட்டம் மேற்கொண்டதன் காரணமாக 2015,2016 ஆண்டு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த 21 நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று குறித்த நபர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் 21 நபர்களும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி அனைத்து வழக்குகளிலும் இருந்து எந்தவித நிபந்தனைகளும் இன்றி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு