40 இலட்சத்துக்கு அதிகமான சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு!! -அமெரிக்காவில் நிலைமை மோசம்-

ஆசிரியர் - Editor II
40 இலட்சத்துக்கு அதிகமான சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு!! -அமெரிக்காவில் நிலைமை மோசம்-

அமெரிக்கா நாட்டில் இன்றைய நிலவரப்படி 40 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சிறுவர் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 15 ஆம் திகதி வரையான உத்தியோகபூர்வ தரவுகளின் பிரகாரம் 4.09 மில்லியன் சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக சிறுவர்களிடையே தொற்று பாதிப்பு குறைந்துவந்தபோதும் இம்மாதம் நடுப்பகுதி முதல் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொகை இரு மடங்காக அதிகரித்து வருகிறது எனவும் அமெரிக்க சிறுவர் சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் 23,500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்கா முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த மக்களில் 14.2 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 1.3 முதல் 3.6 வீதம் வரையான சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்களிடையே 0.26 வீத மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா தொற்று நோயால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் மரண வீதம் மிகக் குறைவாகவே உள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்கள் குறித்த தரவுகளைத் திரட்ட வேண்டியுள்ளது எனவும் அந்நாட்டு சிறுவர் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு