தூக்கில் சடலமாக தொங்கிய பெண் மருத்துவர்: வெளிச்சத்துக்கு வந்த கணவனின் கோர முகம்!

ஆசிரியர் - Editor IV
தூக்கில் சடலமாக தொங்கிய பெண் மருத்துவர்: வெளிச்சத்துக்கு வந்த கணவனின் கோர முகம்!

இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் பெண் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் தந்தை சில அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்துள்ள மாநில பெண்கள் ஆணையம் பொலிசாரிடமும் அந்த அறிக்கையை கொடுத்துள்ளனர்.

இதனிடையில் கிரண்குமாரின் கோர முகம் குறித்து விஸ்மியாவின் தந்தையும் குடும்பத்தாரும் பேசியுள்ளனர். விஸ்மியா தந்தை கூறுகையில், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கிரண்குமார் தன்னை எப்படியெல்லாம் அடித்து துன்புறுத்தினார் என என்னிடம் போனில் அவள் சொன்னாள்.

இதோடு உடலில் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பினாள். திருமணத்தின் போது நாங்கள் 100 சவரன் தங்கம், 1.20 ஏக்கர் நிலம் கொடுத்தோம்.

ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண்குமார் விஸ்மியாவை கொடுமைப்படுத்தி வந்தார். ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும் பரிசாக அவருக்கு அளித்தேன்.

ஆனால் அந்த கார் தனது கவுரவம் மற்றும் அந்தஸ்துக்கு ஏற்றார் போல இல்லை என கூறி என் மகளை துன்புறுத்தியிருக்கிறான். இதோடு அந்த காரை விற்று பணத்தை எடுத்து கொள்ளவும் விரும்பியிருக்கிறான் என கூறியுள்ளார்.

இதனிடையில் தொடர் துன்புறுத்தல் காரணமாக சில காலம் விஸ்மியா தனது பெற்றோர் வீட்டில் சென்று இருந்திருக்கிறார். அங்கு சென்ற கிரண்குமார் அவரை வலுக்கட்டாயமாக சமீபத்தில் தனது வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையிலேயே விஸ்மியா தற்போது உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு