ஜ.பி.எல் மிகுதி போட்டிகள் நடக்குமா? -மும்பையில் மட்டும் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ தீவிர ஆலோசனை-

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் மிகுதி போட்டிகள் நடக்குமா? -மும்பையில் மட்டும் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ தீவிர ஆலோசனை-

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல். போட்டிகளை தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

கே.கே.ஆர் அணியில் இடம் பிடித்துள்ள தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனால் நேற்று இரவு ஆமதாபாத்தில் நடக்க இருந்த கொல்கத்தா-பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிற்பகலில் அறிவித்தது. 

மேலும் சி.எஸ்.கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. இருப்பினும் அணி வீரர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

தொற்றுக்கு உள்ளான கே.கே.ஆர் மற்றும் சி.எஸ்.கே அணிகளின் வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் கே.கே.ஆர் அணியுடன் கடைசியாக மோதிய டெல்லி அணியின் வீரர்கள் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள சி.எஸ்.கே- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  

இதற்கு மத்தியில், மிகுதி ஐ.பி.எல் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்துவது பற்றி பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் 3 மைதானங்கள் இருப்பதால் அங்கு போட்டிகளை நடத்துவது பற்றி பி.சி.சி.ஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்கள் தங்குவதற்காக பயோ பாதுகாப்பு வளையத்தை உருவாக்குமாறு ஹோட்டல் நிர்வாகங்களை பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு