கைது செய்யப்பட்ட அருட்தந்தை பாஸ்கரன் பிணையில் விடுதலை..! மன்றில் பொலிஸார் கடும் ஆட்சேபனை..

ஆசிரியர் - Editor I
கைது செய்யப்பட்ட அருட்தந்தை பாஸ்கரன் பிணையில் விடுதலை..! மன்றில் பொலிஸார் கடும் ஆட்சேபனை..

மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த முயற்சித்தமைக்காக கைது செய்யப்பட்ட அருட்தந்தை பாஸ்கரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.பிரதான வீதியில் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குரு பீடத்தின் முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்ததாக 

அருட்தந்தை பாஸ்கரன் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனின் ஒளிப்படங்கள், 

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்களை உள்ளடக்கி அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகினார். சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து அவர் சமர்ப்பணம் செய்தார்.

பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், சந்தேக நபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மன்றுரைத்தனர். 

அருட்தந்தையை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு