இந்தியாவிலிருந்து கடல்வழியாக நுழைவோரினால் வடமாகாணம் பாரிய ஆபத்தில் உள்ளது..! அண்மையில் 8 பேர் கைது, தொியாமலும் பலர் வந்திருக்கலாம்..

ஆசிரியர் - Editor I

இந்தியாவிலிருந்து கடல்வழியாக நாட்டுக்குள் நுழைபவர்களால் வடமாகாணம் பாரிய ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது அண்மை நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு 

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.கடற்கரையை அண்டிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் விசேட ரோந்து, 

கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் அண்மையில் தொண்டமானாறுப் பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்திறங்கிய 8 பேர் 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால் இன்னும் எத்தனை பேர் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தந்துள்ளார்கள் என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது. 

இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநராலும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கின்றது.அதாவது கடற்கரையை அண்டிய பகுதிகளில் உள்ள பிரதேச செயலர்கள் தமது பிரதேச மட்டத்தில் 

கட்டாயமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீங்கள் தயாராக வேண்டும். தங்களது பிரதேசங்களில் மாதத்திற்கு இரண்டு தடவைகள் அந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, 

பொதுச் சுகாதார பரிசோதகர், கடற்படையினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அப்பகுதி பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகளின் பங்குபற்றுதலோடு மாதத்தில் இரண்டு தடவைகள் 

கூட்டங்களை வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.ஏனென்றால் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களை அடையாளம் காணுமிடத்தில் 

கொரோனா வைரஸ் ஏனையவர்களுக்கு பரவாதவாறு கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் பரவுவதைத் தடுப்பது மிகவும் கஷ்டமான விடயம். 

அண்மையில் நெடுந்தீவில் ஒரு சம்பவம் இடம்பெற்றது எனினும் பொதுச் சுகாதார பரிசோதகரின் துரித முயற்சியால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க எதிர்வரும் காலங்களில் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோர் தொடர்பில் 

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அத்தோடு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் இதற்குரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது என பணிப்பாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு