நான் மக்களிடம் பணம் வாங்கி மக்களிடம் கடனாளியாக, மக்கள் சொல்வதை செய்யும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்..! அதில் என்ன தவறு..?

ஆசிரியர் - Editor I

தமிழ் மக்கள் விரும்பும் வகையில் பணியாற்றுவதற்கும், தமிழ் மக்கள் எங்களை தட்டிக்கேட்கும் அளவுக்கு பணியாற்றுவதற்கும் மக்களிடம் பணம் கேட்பதில் தவறில்லை. பெரும் செல்வந்தர்களிடம் பணம் வாங்கி அவர்களின் கைபொம்மையாக நாம் இருக்கோம். 

என கூறியிரு க்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உரித்தான பணத்தை தங்களுடைய சொந்த தேவைக்காக எடுக்கும் பழக்கம் ராஜபக்சக்களுக்கு இருக்கலாம். ஆனால் எமக்கு அந்த பழக்கம் இல்லை. 

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சீ.வி.விக்னேஸ்வரனிடம் வடக்குக்கு அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பியவர் இப்போது மக்களிடம் பணம் கேட்கிறாரா? 

என பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி கேட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், நாங்கள் மக்களிடம் பணம் கேட்பதில் தவறு என்ன இருக்கிறது? 

மக்களின் சொல்கேட்டு, மக்களுக்காக செயற்படுவதற்கு மக்களிடம் பணம் கேட்பதில் தவறு என்ன? பெரும் செல்வந்தர்களிடம் பணம் கேட்டுவிட்டு பின்னர் அவர்களின் கைபொம்மையாக இருப்பதே தவறு, அதனை நாம் செய்யமாட்டோம். மாகாணசபை காலத்தில் 

எங்களிற்கு அனுப்பிய பணம் எதுவும் திருப்பினுப்பப்படவில்லை. ஆனால் அவர்களின் அமைச்சர்களிற்கு அனுப்பிய பணத்தை செலவிடாமல் எமது தலையில் கட்டுகிறாரோ தெரியவில்லை. இவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்படுவதற்கு உள்ள காரணம் அச்சம். 

மக்களிற்கு சேவை செய்ய, மக்களிடம் பணம் கோருவதில் என்ன தவறு? மக்களிடம் பணம் பெறும்போது, அவர்களிற்கு சேவை செய்யும் தார்மீக கடப்பாடு வேட்பாளர்களிற்கு அதிகரிக்கும். மக்களால் முடிந்த சிறிய, பெரிய அளவிலான உதவியை கோருகிறோம். 

அதற்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படும். பணத்தை வழங்கிய மக்களே நாளை உரிமையுடன் எமது குறைகளை சுட்டிக்காட்டுவார்கள். மக்களிற்காக சேவை செய்ய மக்களிடம் பணம் கேட்பதில் தவறில்லையென்பதே எமது நிலைப்பாடு. 

இங்குள்ள பெரும் பணக்காரர்களிடம் பணம் வாங்கி, அவர்களின் சொற்படி நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. மக்களை நாம் நம்பிக்கைக்கு பொறுப்பாக்கி, அவர்களின் நம்பிக்கைக்கு நாம் பொறுப்பாக செயற்படுவோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு