இலங்கை கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது..! அணிசேரா நாடுகளின் தலைவர்களிடம் ஐனாதிபதி பெருமிதம்..

ஆசிரியர் - Editor I
இலங்கை கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது..! அணிசேரா நாடுகளின் தலைவர்களிடம் ஐனாதிபதி பெருமிதம்..

அணிசேரா நாடுகள் அமைப்பின் - 'கொவிட் 19க்கு எதிராக ஒன்றுபடுவோம்' என்ற தலைப்பிலான இணையவழி மாநாட்டில்-  2020, மே 04ஆம் திகதி - இலங்கை சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி  ஆற்றிய உரை..

நவீன காலத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்வதற்காக, இந்த உச்சிமாநாட்டை நடத்துவதற்காகச் சரியான நேரத்தில் முன்னெடுப்புகளை செய்த - அணிசேரா இயக்கத்தின் தலைவரான அஸர்பைஜானின் தலைவர் மேதகு இலாம் அலியேவை நான் வாழ்த்துகிறேன்.

COVID -19ஐ முறியடிப்பதில் உலகளாவிய ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பல்தரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவாக இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த கொடிய நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுவதிலும், கற்றுக்கொண்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் படிப்பினைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் உலகளாவிய கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அணிசேரா உறுப்பு நாடுகளுக்கு இந்த உச்சிமாநாடு ஒரு முக்கியமான தளமாக அமையும் என்று இலங்கை உறுதியாக நம்புகிறது.

தொற்றுநோய்களின் போது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இலங்கையிலும் உலக அளவிலும் உள்ள முன்னணி சுகாதார மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகத்திற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொற்றுநோயிலிருந்து நமது நாடுகளுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பேரழிவு தரும் சுகாதார பாதிப்புகள், மனிதாபிமான நெருக்கடி, பொருளாதாரங்களின் பேரழிவு மற்றும் சமூக மற்றும் உளவியல் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவற்றால் இலங்கை ஆழ்ந்த கவலையில் உள்ளது.

எனவே, இந்த உச்சிமாநாட்டின் பிரகடனத்தை அங்கீகரிப்பதில் இலங்கை மகிழ்ச்சியடைகின்றது.

அவசர தேவைகள் குறித்து நன்கொடையாளர்களை உணர்த்துவதற்காக உறுப்பு நாடுகளின் அடிப்படை மனிதாபிமான மற்றும் மருத்துவ தேவைகள் குறித்த தரவுத்தளமொன்றைத் தொகுக்க ஒர் அணிசேரா செயலணியை நிறுவுவதற்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்பை இலங்கை அங்கீகரிக்கிறது.

கோவிட் -19 உலகளாவிய மனிதாபிமான பதிற்குறி திட்டம்' மற்றும் ஐக்கிய நாடுகளின் கோவிட் -19 பதிற்குறி மற்றும் மீட்பு நிதியத்தை நிறுவுவதை நாங்கள் பாராட்டுகிறோம்.

தொற்றுநோயிற்கு எதிரான கான உலகளாவிய எதிர்ப்பு வேலைத்திட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் WHOஇன் முயற்சிகளையும் இலங்கை ஆதரிக்கிறது.

கோவிட் -19 அச்சுறுத்தலை இலங்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் 3 வீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இறப்பு வீதம் 0.97வீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில், தொற்றுநோய் பரவுவதைக் கண்காணிப்பதற்கும், எதிர்த்துப் போராடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முக்கிய சுகாதாரப் பணியாளர்கள், உயர்மட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு செயலணியை எனது அரசாங்கம் நிறுவியது.

இலங்கையில் முதல் கொவிட் -19 நோயாளி மார்ச் 11 அன்று அடையாளம் காணப்பட்டார்;

ஆரம்ப நோயாளிகள் பல நாடுகளிலிருந்து வந்த இலங்கையர்கள்;

அப்போதிருந்து, பாதிக்கப்பட்ட 717 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்;

அவர்களுள் - 183 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்;

527 பேர் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றனர். இந்த நபர்களில் பெரும்பாலானோர் அறிகுறியற்றவர்கள்.

நாங்கள் சில சிறப்பான, தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்: 

ஆயுதப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களை நிறுவுதல்;

மற்றும், தொடர்பு கண்காணிப்பு செய்ய அரச புலனாய்வு சேவைகள், காவல்துறை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரை அனுப்புதல் -

- இந்த இரண்டு நடவடிக்கைகளும், இந்த தொற்றுநோயைச் சமாளிக்க இலங்கைக்கு உதவியதுடன், சுகாதார அதிகாரிகள் உகந்த மட்டத்தில் செயல்பட உதவுகின்றன.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கண்டறியப்பட்ட போதெல்லாம், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட நபர்களின் விவரங்களைக் கண்டறிய தொடர்பு கண்டுபிடிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது.

அடையாளம் காணப்பட்டவுடன், அத்தகைய நபர்கள் அனைவரும் சிறப்பாக நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படுத்தல் மையங்களிற்கு கொண்டு செல்லப்பட்டனர் அல்லது அத்தகைய நபர்களை சுய தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஒரு முழுப் பிரதேசமே தொற்றுப் பரவியுள்ளதாக்க் கண்டறியப்பட்டால், அத்தகைய பகுதிகள் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட 31 கொத்தணிப் பிரதேசங்களில், 27 முற்றிலும் மென்மையான கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டதுடன், மற்ற 4 கொத்தணி பகுதிகள் - பொது மக்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் கடுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

விரிவான பி.சி.ஆர் பரிசோதனைச் செயன்முறை எம்மிடம் உள்ளதுடன், சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து பி.சி.ஆர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் நன்கு நிறுவப்பட்ட தடுப்பு பொறிமுறையை உள்ளடக்கிய ஒரு சிறந்த இலவச சுகாதார முறையால், பொதுச் சுகாதார செயல்முறைகளைப் பயன்படுத்தி இந்த கொடிய நோய்க்கிருமி பரவுவதை இலங்கையால் கட்டுப்படுத்த முடிந்திருக்கின்றது.

கொவிட் - 19 நோய்க்கிருமி பரவுவதை எதிர்த்துப் போராடுவதில் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய சேவைகளுக்கு உதவுவதற்காக, எனது அரசாங்கம் மார்ச் 18 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்து மக்கள் நடமாட்டத்தை தடை செய்தது.

இந்த நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் செயற்கையான பாதிப்புக்களை எதிர்கொள்ள - நாம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்:

- குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நாளாந்த வருமானம் பெறுவோர் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி;

-  இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவதை ஒருங்கிணைந்த முறையில் ஒழுங்கமைத்தல்;

- ஏற்கனவேயுள்ள கைத்தொழில்களை ஊக்குவிக்கும் அதேநேரம் புதிய பொருளாதாரச் செயற்பாடுகளை உருவாக்க வர்த்தக வழிகளை ஆராய்தல்;

- விவசாயி, நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தரை இணைப்பதற்கும், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும், மற்றும் தொலைக் கல்வி உள்ளிட்டவற்றுக்கும் இலத்திரனியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னேறுதல்.

இந்த நோய்த்தொற்றை எதிர்கொள்ளத் தேவையான முக்கிய மருத்துவ வளங்களை அனைத்து நாடுகளும் கட்டுப்பாடற்ற வகையில் பெறுவதனையும், மேலும் அவற்றை கொள்முதல் செய்வதில் அவை தடைகளை எதிர்கொள்ளாதிருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.

தொற்றுநோயினால் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்பார்க்காத வகையில் பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று இலங்கை ஆழ்ந்த அக்கறை கொள்கின்றது.

அத்துடன் - இந்த நாடுகளுக்கான கடன் நிவாரணம் மற்றும் நிதி தேவை முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இது சம்பந்தமாக, இலங்கை தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கான கடன் வேண்டுகோளையும், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு அதிக நிதி உதவிகளையும் வழங்குவதற்கான உலகளாவிய வேண்டுகோளையும் அதனுடன் இணைந்துகொள்கின்றது.

இந்த தொற்றுநோயால் உருவாகியுள்ள முக்கியமான மற்றும் மாறுபட்ட பொருளாதார மற்றும் சமூகச் சவால்களை நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் எதிர்கொள்கின்றன என்பதை வலியுறுத்துவது இங்கு முக்கியம்.

எனவே, இந்த குறிப்பிட்ட கட்டத்தில் அவர்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதும் பாதகமான பொருளாதார விளைவுகளைத் தவிர்க்கத் தேவையான நிதி உதவியை வழங்குவதும் முக்கியம்.

உள்நாட்டு மற்றும் பிராந்திய மட்டத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் - கொரோனா நெருக்கடிக்கு உலகளாவிய மட்டத்தில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பலப்படுத்துகின்றதை என இலங்கை நம்புகிறது.

இந்த சவாலை சமாளிக்கும் முயற்சிகளில் - தெற்காசிய பிராந்தியத்திற்கு உதவுவதற்காக, சார்க் கொவிட் - 19 அவசர நிதிக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கியது.

கொவிட் 19 தொற்றுநோய் தொடர்பாக அதன் பட்டறிவுகளையும் வெற்றிகளையும் சக உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இலங்கை விரும்புகிறது.

இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்கா அணிசேரா அமைப்பின் தலைவருக்கு இலங்கையின் பாராட்டுக்களை நான்  மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முறியடிப்பதிலும் அணிசேரா அமைப்பின் முன்னெடுப்புகளுக்கு எமது நாட்டின் ஆதரவையும் மீண்டும் நான் உறுதியளிக்கிறேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு