தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் புதிய முயற்சி..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் புதிய முயற்சி..!

தற்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் பொது நோக்கோடு ஒருங்கிணைக்கும் முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான அவசர சந்திப்பொன்று இன்று இரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ. சேனாதிராஜா, 

சி.சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன், சட்டத்தரணி க. சுகாஸ் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க. அருந்தவபாலனும், 

ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் எஸ். ராகவன் ஆகியோரும் ரெலோ அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் 

சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ் மக்களின் நலன் நோக்கி, பொது நிலைப்பாடொன்றுக்கு வருவதற்கான இணக்க நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே உத்தியோக பூர்வமான 

நிலைப்பாட்டை வெளியிடுவர் என்றும் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறிய கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். மேலும், இன்றைய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததோடு அடுத்த சந்திப்பை எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை நடாத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டிருருப்பதாக அறிய வருகிறது.

இதே வேளை, இந்தச் சந்திப்புத் தொடர்பில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனித்தனியாக நிலைப்பாடுகளை வெளியிடாமல் தமது நிலைப்பாட்டை அறிக்கை வடிவில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு