வார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை ஆடி 5 முதல் 11 வரை

ஆசிரியர் - Admin
வார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை ஆடி 5 முதல் 11 வரை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் 

கும்பம் 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.
மீனம் 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.
மேஷம் 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.
ரிஷபம் 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
21.07.2019 ஆடி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 21, 25, 26.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி அடைவீர்கள். பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 27.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் விலகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ பெருமானை வணங்குவதும் முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25, 26.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதும், சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். தற்போது நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்வதாலும், உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் 25, 26, 27.
சந்திராஷ்டமம் - 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் சில ஏற்படும் என்றாலும் சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சஷ்டி அன்று முருக பெருமானை வணங்கி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 27.
சந்திராஷ்டமம் - 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த தடையும் இருக்காது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் 21, 22, 23.
சந்திராஷ்டமம் - - 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் தொழில் வியாபார ரீதியாக வெற்றி மேல் வெற்றி தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வளர்ச்சிக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் 22, 23, 24, 25, 26.
சந்திராஷ்டமம் - 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். கூட்டாளிகளும் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். சிறப்பான பண வரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். சனி, கேது 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரமாகும். தேவையற்ற அலைச்சல்கள், வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். முடிந்த வரை புதிய முயற்சிகளை தவிர்ப்பது பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 27.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு, 7-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் உன்னத அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் 21, 25, 26.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சூரியன், புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முடிந்த வரை உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன்க-ளும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 27.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு