சம்பந்தனின் காலத்தில் தீர்வு கிடைக்கும் சாத்தியமில்லை! - விக்னேஸ்வரன்

ஆசிரியர் - Admin
சம்பந்தனின் காலத்தில் தீர்வு கிடைக்கும் சாத்தியமில்லை! - விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ், அவரது காலத்தில் தீர்வு கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் நோர்வே சுன்மோர் வாழ் மக்களின் நிதி உதவியுடன் இன்று இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

'அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டி வரும் என சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். நாங்கள் ஆயுதம் ஏந்தக் கூடிய நிலையில் இல்லை. மூன்று மாதங்களுக்கு தீர்வுகள் கிடைக்கா விடின் ஆயுதம் ஏந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை. இது பேச்சுக்காக பேசும் பேச்சு போலவே தெரிகிறது.

ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் ஏற்பட்டு முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திய தாக்கம் இப்போதும் எங்களிடம் இருக்கிறது. எனவே இது சம்மந்தமாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனக் கூறியிருக்கலாமே தவிர ஆயுதங்கள் எடுப்போம் என்ற பேச்சு, கூற்று மனவருத்ததிற்குரியது என்பது என்னுடைய கருத்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 2016 இல் இவ்வருட இறுதிக்குள் தீர்வு என்று கூறினார். அவ்வாறே 2017 லும் 2018 லும் கூறினார். இப்பொழுது எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறுகின்றார். ஆனால் நாங்கள் இதைதான் அப்பொழுது இருந்தே கூறி வந்தோம். அரசு எப்பொழுதும் மனமுவந்து தீர்வினை வழங்காது. அரசுக்கு நெருக்கடிகளை, அழுத்தங்களை கொடுத்தே தீர்வுகளை பெறவேண்டும். அல்லது அவர்கள் தங்களின் சுயநலன் கருதி தீர்வுகளை வழங்கலாம். இதனை விடுத்து அரசுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தீர்வினை தருவார்கள் என்று நம்புவது சிறுபிள்ளைதனமானது.

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு தீர்வுகள் கிடைக்க கூடும் என்று சாத்திய கூறுகள் எதுவும் தென்படவில்லை. சம்பந்தன் நூறு வயது வரை இருந்தால் சில வேளை அவரது காலத்தில் தீர்வு கிடைக்க கூடும். ரணில் சில வேளைகளில் இந்த தேர்தல் காலங்களில் அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் தீர்வுகளை தரலாம் என கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. அது நடக்குமா என்பதனை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு