SuperTopAds

சம்பந்தனே கூட்டணியை அழித்து விட்டார்! - ஐ.நாவுக்கு சங்கரி கடிதம்

ஆசிரியர் - Admin
சம்பந்தனே கூட்டணியை அழித்து விட்டார்! - ஐ.நாவுக்கு சங்கரி கடிதம்

இரா.சம்பந்தனும், அவரின் கோஸ்டியினரும் செய்த துரோகத்தாலேயே இலகுவாக தலையெடுக்க முடியாத அளவிற்கு தமிழர் விடுதலை கூட்டணிக்கு அழிவு ஏற்பட்டது என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும்,“இவ் விண்ணப்பம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யுனேஸ்கோ அமைப்பின் சகிப்பு தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுக்க மதன் ஜீத் சிங்கால் நிறுவப்பட்ட 2006ஆம் ஆண்டுக்குரிய விருதை பெற்றவனும், 17 ஆண்டுகளிற்கு மேல் இலங்கை நாடாளுமன்றில் அங்கத்துவம் வகித்தவனும், இலங்கை அரசியலில் 60 ஆண்டுகளிற்கு மேல் ஈடுபாடு கொண்ட மிக மூத்த தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரிடம் இருந்து வருகின்றது.

47 ஆண்டுகளிற்கு முன் 1972இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்ப கால உறுப்பினரும், தற்போதைய செயலாளர் நாயகமும் நான் ஆவேன். கடந்த நூற்றாண்டின் 40 ஆண்டுகளில் மிகப் பிரபல்யமும், திறமைசாலிகளுமாக திகழ்ந்த வழக்கறிஞர்களான சா.ஜே.வே.செல்வாநாயகம் கியூசியும், ஜீ.ஜீ பொன்னம்பலம் கியூசியும் தமது 23 வருட அரசியல் விரோதத்தை ஒரு புறம் தள்ளிவிட்டு தமது அரசியற் கட்சிகளாகிய தமிழரசு கட்சியையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியையும் ஒன்றிணைத்து 14.05.1972 உருவாக்கிய கட்சியே தமிழர் ஐக்கிய கூட்டணியாக உருப்பெற்று பின்பு தமிழர் விடுதலை கூட்டணியாக பெயர் மாற்றம் பெற்றது.

இனியும் பிரிவதில்லையென உறுதியான முடிவுடனும் தம் தம் பழைய கட்சிகளை இனி புதிப்பிப்பதில்லை என்ற தீர்வுடன் தமிழ் மக்களின் நன்மை தீமைகளை கவனிப்பதற்காக அக்கட்சியை தமிழ் மக்களிற்கு தம் சொத்தாக விட்டுச் சென்றனர்.அரசு புதியதோர் அரசியல் சாசனத்தை உருவாக்கி இலங்கையை ஓர் குடியரசாக மாற்ற நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த வேளை, இவ்விரு கட்சிகளின் இணைவும் இலங்கையின் சரித்திரத்தில் ஓர் முக்கிய நிகழ்வாகவும், ஓர் மைல் கல்லாகவும் கருதப்பட்டது.

அக்கட்டத்தில், இவ்விரு கட்சிகளின் இணைப்பு மிக்க அவசிய தேவையாக கருதப்பட்டது. இன ஒற்றுமைக்கு வலுவூட்ட இவ்விரு பெரும் கட்சிகளின் இணைப்பை உலகின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அன்று செயற்பட்ட ஆயுத குழுக்கள், புதிய கட்சிகள் ஆகியன அவர்களின் முன்னேற்றத்திற்கு ஓர் முட்டுக்கட்டையென விளங்கிய காரணத்தால் இவ்வமைப்பில் இணைய விரும்பவில்லை.

தமிழர் விடுதலை கூட்டணி பல முட்டுக்கட்டைகளை எதிர்நோக்கினாலும்,பெரும் முன்னேற்றத்தையும் கண்டது. சாத்வீக போராட்டம் தோல்வியடைந்தமையாலேயே ஆயுத போராட்டம் தொடங்கப்பட்டதென கூறுவது முற்றிலும் பிழையான கருத்தாகும்.எது எப்படியிருப்பினும், கட்சியின் உயர் மட்டத்தில் ஏற்பட்ட படுகொலைகளால் கட்சியில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள், ஒரு கூட்டை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

அன்றைய செயலாளர் நாயகமாக விளங்கிய இரா.சம்பந்தன் தமிழர் விடுதலை கூட்டணியை புலிகளின் ஓர் அங்கமாக்க முயற்சித்து தோல்வி கண்டதும், தமிழரசு கட்சியின் சின்னமாகிய வீடு சின்னத்தில் போட்டியிட்டு, நியமனப்பத்திரம் தாக்கல் செய்தவுடன் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் தாம் நியமன பத்திரத்தை விடுதலை புலிகளின் சார்பிலேயே தாக்கல் செய்துள்ளதாகவும், பகிரங்கமாக ஊடகங்களிற்கு தெரியப்படுத்தினார்.

தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் என்றும் அவர்களே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் அச்சிட்டு வெளியிட்டனர். இரா.சம்பந்தனின் துரோக செயலாலேயே 2004ஆம் ஆண்டு தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட முடியாமல் சுயேட்சை குழுவாக போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இரா.சம்பந்தனும், அவரின் கோஸ்டியினரும் செய்த துரோகத்தாலேயே இலகுவாக தலையெடுக்க முடியாத அளவிற்கு தமிழர் விடுதலை கூட்டணிக்கு அழிவு ஏற்பட்டது.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலிலேயே ஜனநாயகம் முற்று முழுதாக தடம் புரண்டு நாட்டை சிதறடித்தது. இத்தேர்தலிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு தேசியப் பட்டியல் உறுப்பினர் உட்பட 22 ஆசனங்களை பெற்றது. வாக்காளர்களில் பெரும் பகுதியினரை வாக்களிக்க அனுமதிக்காது, பல வித இடைஞ்சல் கொடுத்தும், வாக்காளர்களை மிரட்டல் செய்தும், பெருமளவில் ஆள்மாறாட்டம் செய்தும் வேறுபல உதவிகளும் பெற்றே தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த பெரும் தவறு இவ்வுதவிகளை பெற்றுக் கொண்டமையே. அதிலும் மோசமாக அன்று ஆட்சியமைத்த அரசு கூட இவ்வாறு ஆசனங்களை வென்றவர்களை பதவி நீக்கவும் இல்லை, நாடாளுமன்றம் வரும் உறுப்பினர்கள் எவருக்கும் எதுவித தடையும் விதிக்கவில்லை. வெளிநாட்டையும், உள்நாட்டையும் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர், வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கை தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

ஓர் ஜனநாயக நாட்டில் தேர்தல் நேரம் இத்தகைய அக்கிரமங்கள் நடந்துள்ளன. வன்முறை தலை விரித்தாடியது. இந்த நிலையில் சகல ஜனநாயக அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புக்கள், விசேடமாக புலம்பெயர்ந்தோர் போன்றோரால் நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சட்டவிரோதமாக சபையில் அமர்ந்திருந்து வாக்கெடுப்புக்களில் கலந்து கொண்டு செயற்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தையும் பேசாதமை இன்றும் ஓர் மர்மமாக இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓர் சட்டவிரோதமான அமைப்பென கண்டிக்காத அரசியல்கட்சிகள் இன்றைய நிலைமைக்கு முழு பொறுப்பையும் கூற வேண்டும்.நான் மிக துணிவுடன் கூறக்கூடியது யாதெனில், அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே குரலில் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தல் நடந்த முறையை கண்டித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

நான் மீண்டும் மீண்டும் கிளப்பிய ஆட்சேபனைகள் எவராலும் பொருட்படுத்தப்படவில்லை. பெரிதாக கருதப்படவும் இல்லை. மீளதலை தூக்க முடியாத அளவிற்கு ஜனநாயகம் ஒழிக்கப்பட்ட முறையினால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் அப்பாவி மக்களே.

கண்டவர்களும் சுரண்டிப் பார்க்காத முறையில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமாக இருந்தால் எல்லோரும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டிய கட்டம் வந்துள்ளது.2004ஆம் ஆண்டு பொது தேர்தலில் விடுதலைப் புலிகள், தராகி சிவராம் மற்றும் தமிழ் அமைப்புக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மறுமலர்ச்சி மன்றம் போன்றோர் ஒன்றிணைந்து விரும்பியவாறு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் எமது ஆசை நிறைவேறி, 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும்.

ஆனால், தமிழரசு கட்சி விடுதலைப் புலிகளிற்கு உரிய முறையில் ஆலோசனை வழங்காது, அவர்கள் செயற்பாடுகள் எல்லாவற்றையும் உற்சாகமூட்டி பின்னடைய செய்துவிட்டு, இன்று அவர்களிற்கு எதிராக யுத்த குற்றங்களை விசாரிக்குமாறு கேட்பது வேடிக்கையாக இருக்கின்றது. அவர்களின் செயற்பாட்டாலேயே யுத்தமும் ஐந்து ஆண்டுகள் நீடித்தது. 30 ஆண்டுகாலமாக இடம்பெற்ற யுத்தத்தில் பல இன மக்களும் அனுபவித்த துன்பங்கள் ஒரு புறமிருக்க, மனித உரிமை மீறலே மக்களிற்கு பெரும் தீங்கை விளைவித்தது.

என்னுடைய ஆலோசனைகள் சில பின்னே குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை முறைப்படி கடைப்பிடித்திருந்தால் பல்லாயிரகணக்கான உயிர்கள், மனித உரிமை மீறல்களால் ஏற்பட்ட துன்பங்கள் ஆகியன மிக மிக சொற்பமாகவே இருந்திருக்கும்.

1. 2009ஆம் ஆண்டு தை மாதம் கிளிநொச்சி பறிபோனவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை, அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள். அன்றேல் உங்கள் நாடாளுமன்ற பதவிகளை துறவுங்கள் என்று கூறியிருந்தேன். அதற்கு அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை.

2.எனது வேண்டுகோளிற்கிணங்க ஜனாதிபதி சகல கட்சி தலைவர்களையும் அழைத்து கூட்டிய கூட்டத்தில் ஜனாதிபதியின் கணக்கு தப்பென்றும், 330,000இற்கும் மேற்பட்ட மக்கள் யுத்த பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் கூறிய போது எனது கணக்கு பிழை என ஜனாதிபதி மறுத்துரைத்தார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

3.இந்திய வெளிவிவகார செயலாளரின் அழைப்பை கூட்டமைப்பினர் ஏற்க மறுத்து, யுத்தத்தை நிறுத்துங்கள் வருகின்றோம் என்று நிபந்தனை வைத்ததை நான் கண்டித்திருந்தேன். ஆனால், அது பிரயோசனப்படவில்லை.

4.பிரித்தானியா நாடாளுமன்ற குழுவை கூட்டமைப்பினர் சந்தித்து இந்திய தேர்தல் முடிவுகள் விரைவில் வரவுள்ளன. அப்போது பெரும் அனர்த்தம் ஏற்பட்டு பல மக்கள் உயிரிழக்க நேரிடும் என கூறியிருந்தனர். ஆகவே இந்த நிலைமை ஏற்படும் என்ற உண்மையை இவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

ஆகவே,சர்வதேச சமூகம் இத்தகைய சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களிற்கு சலுகை காட்டாமல் உண்மையாக செயற்பட வேண்டும் என வலியுறுத்தி கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.