SuperTopAds

யாழில். பெண்ணொருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த பெண் கைது

ஆசிரியர் - Editor II
யாழில். பெண்ணொருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த பெண் கைது

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில்  பெண்ணொருவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை கடந்த 2023ம் ஆண்டு பெற்றுள்ளார்.

அதன் பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்தது.

குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன் நேற்றைய தினம் செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.