யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நடந்த பஸ் ரேஸ்! மயிரிழையில் தப்பிய பயணிகள்...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நடந்த பஸ் ரேஸ்! மயிரிழையில் தப்பிய பயணிகள்...

யாழ்ப்பாணம் - மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டி போட்டு முழங்காவில் பேருந்தை முந்த முயற்சித்த நிலையில் நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (18) மாலை யாழ்ப்பாணம் முழங்காவில் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சனிக்கிழமை பகல் 3 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றுமொரு தனியார் பேருந்து சாரதி வேகமாகவும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பயணிகளுடன் மன்னார் நோக்கி வந்த தனியார் பேருந்து நிலை தடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்றுள்ளது.

எனினும், மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன், பேருந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ச்சியாக மன்னார் - யாழ்ப்பாணம், மன்னார் - வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிர்களை மதிக்காமல் பேருந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும், அதனால் அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு