பொலிஸார் தலைகீழாக கட்டி தூக்கி, முகத்திற்கு சொப்பின் பை போட்டு அடித்து சித்திரவதை செய்தனர் - உயிரிழந்த இளைஞனின் வீடியோ வெளியானது...

ஆசிரியர் - Editor I
பொலிஸார் தலைகீழாக கட்டி தூக்கி, முகத்திற்கு சொப்பின் பை போட்டு அடித்து சித்திரவதை செய்தனர் - உயிரிழந்த இளைஞனின் வீடியோ வெளியானது...

விளக்கமறியல் கைதியாக இருந்து யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளைஞன் பொலிஸார் தன்னை தாக்கி சித்திரவதை செய்ததாக வைத்தியசாலையில் தெரிவித்த காணொளிகள் உயிரிழந்தவரது உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை 3,4 மணித்தியாலங்களுக்கு மேலாக முகத்தினை  சொப்பின் பாக்கினால் கட்டிவைத்து  தாக்கி சித்திர வதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் காணொளியில் தெரிவித்துள்ளார்.

களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரே இன்றையதினம் உயிரிழந்தார்.

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25)என்பவரே உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

தாயார்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள்  கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்கவாலரின் காவலுடன் உயிரிந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை சவ அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு