A -9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி!

ஆசிரியர் - Editor I
A -9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி!

வவுனியா A - 9 வீதியில் சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (18.11) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டர் சைக்கிளில் பயணித்துள்ளார். 

குறித்த மோட்டர் சைக்கிள் வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று சாந்தசோலை சந்தியில் திரும்ப முற்பட்டுள்ளது. இதன்போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், பொலிஸ் உத்தியோகத்தரான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே மரணமடைந்துள்ளார்.  

மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த திசாநாயக்கா (வயது 27), மற்றும் சாந்தசோலையைச் சேர்ந்த சண்முகம் நாதன் (வயது 63)  என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்கள்

குறித்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு