சங்கிலி அறுத்தவர்களை துரத்திய பெண், மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடிய கொள்ளைர்கள், யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
சங்கிலி அறுத்தவர்களை துரத்திய பெண், மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடிய கொள்ளைர்கள், யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்...

யாழ்.கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய், தனது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (26) மதியம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :

நேற்றுமுன்தினம் இளம் தாய் ஒருவர் தனது பிள்ளையை முன்பள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நின்ற இருவர், குறித்த பெண்ணை மறித்து, நபர் ஒருவரின் பெயரை கூறி விசாரித்துள்ளனர்.

அந்த பெண் தனக்கு தெரியாது என கூறிச் செல்ல முற்பட்டவேளையில், அவரது முக்கால் பவுண் சங்கிலியை அறுத்துவிட்டு, பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு, தமது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

உடனே சுதாகரித்துக்கொண்ட அந்த பெண், தனது மோட்டார் சைக்கிளில் ஒலி சமிக்ஞை எழுப்பி சத்தத்தை ஏற்படுத்தியதோடு,  அந்த வழிப்பறி கொள்ளையர்களை பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார்.

அத்தோடு, வீதியில் பயணித்தவர்களும் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டவேளை, சந்தேக நபர்கள் தமது மோட்டார் சைக்கிளை அங்கேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதோடு, தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு