நீதிபதியின் இராஜினாமா இலங்கை நீதித்துறை மீது விழுந்த கரும்புள்ளி - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

ஆசிரியர் - Editor I
நீதிபதியின் இராஜினாமா இலங்கை நீதித்துறை மீது விழுந்த கரும்புள்ளி - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தலுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குமாறும் நீதித்துறையில் சுயாதீனத்தன்மையையும் நம்பகத்தைன்மையையும் உறுதி செய்யுமாறும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வெள்ளிக்கிழமை (29) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“முல்லைத்தீவு மாவட்ட மாண்புமிகு நீதிபதி திரு.ரி.சரவணராஜா அவர்கள் 23.09.2023 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளதோடு, நாட்டிலிருந்து  வெளியேறியுள்ளார்” என்னும் செய்தி நேற்று முன்தினம் வியாழக்கிழமை (28.09.2023) வெளிவந்து நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளினை ஏற்படுத்தியுள்ளது.

குருந்தூர் மலை வழக்கில் உண்மையினை நிலைநாட்டுவதற்காக நடுநிலையுடனும் நீதியுடனும் வழக்கினை விசாரித்து வந்த  நீதிபதி திரு.ரி.சரவணராஜா அவர்கள் தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியமை என்பது அப்பட்டமாக இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியாகும்.

குருந்தூர்மலை வழக்கில் தொல்பொருட் பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவினை மீறி விகாரை கட்டுமானம் தொல்பொருள் பணிப்பாளரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளையாக்கியிருந்தது. அவ்வாறிருக்க இத் தீர்ப்பினை மாற்றியெழுத சட்டமா அதிபரினால் நீதிபதிக்கு  அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது எனும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாகவிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு