உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் இருந்து கடமைக்கு திரும்பிய ஊழியர்களுக்கு அழுத்தம்!

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் இருந்து கடமைக்கு திரும்பிய ஊழியர்களுக்கு அழுத்தம்!

உள்ளூராட்சிமன்ற தேர்தலில்  போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுப்பில் இருந்து மீண்டும் கடமைக்கு திரும்பிய வலி,மேற்கு பிரதேச உத்தியோகத்தர்கள் செயலாளரினால் கடுமையாக மன அழுத்தங்களுக்கும் உள்ளாவதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக உப அலுவலக பொறுப்பதியாக இருப்பவர் மீதும் சிரேஷ்ட வருமான பரிசோதகராக கடமையாற்றுபவர்கள் மீதே கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கடும் தொனியில் ஒருமையில் பேசி அச்சுறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு முன்பாக தமது அலுவலகங்களில் சிறப்பாக கடமை ஆற்றியிருந்தனர். 

அவர்கள் வேட்பாளர்களாக விடுப்பு பெற்று சென்று தற்சமயம் மீண்டும் பணியில் இணைந்துள்ளபோதும் அவர்களின் பணிகளுக்குரிய ஒத்துழைப்பு மற்றும் பணிகளுக்கான மரியாதை வழங்குவதில்லை என்றும் குறித்த உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சிரேஷ்ட வருமான பரிசோதகராக பணியாற்றிய உத்தியோகத்தரது புதிய தளபாடங்கள் அகற்றப்பட்டு அவருக்கு அலுவலக பாவனையில் இருந்து நீக்கப்பட்ட பழைய தளபாடங்களை வழங்கப்பட்டுள்ளதாகவும், 

இதனால் தமது பணியை சிறப்பாக செய்ய முடியாது இருப்பதாகவும் செயலாளரினால் தான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறித்த சிரேஷ்ட வருமான பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி உப அலுவலகங்களில் பொறுப்பதிகாரியாக இருப்பவர்களை நேரடியாக உப அலுவலகங்களுக்கு சென்று நிலைமைகளை அவதானிக்காமல் தொலைபேசி ஊடாக கடும் தொனியில் ஒருமையில் பேசி அச்சுறுத்ததாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் செயலாளரின் இவ்வாறான அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் தொடர்ந்தால் பணியில் இருந்து இடைவிலக வேண்டிய நிலைவரும் என குறித்த உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு