சேவைக்கு திரும்பிய குமுதினிக்கு மீண்டும் கோளாறு! திருத்த பணிகளுக்காக நீர்கொழும்பு செல்கிறதாம்..

ஆசிரியர் - Editor I
சேவைக்கு திரும்பிய குமுதினிக்கு மீண்டும் கோளாறு! திருத்த பணிகளுக்காக நீர்கொழும்பு செல்கிறதாம்..

நீண்ட நாள் திருத்த வேலைகளின் பின்னர் மீண்டும் நேற்று சனிக்கிழமை சேவைக்கு திரும்பிய குமுதினி படகில் இயந்திர கோளாறு எற்பட்டு செயலிழந்துள்ளது. 

திருத்த வேலைகளின் பின்னர் குமுதினி படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்கட்டுவான் இறங்குதுறையில் நேற்று காலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நிலையிலேயே

படகில் மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினி படகு அடிக்கடி செயலிழந்து வந்துள்ளது. 

இந்நிலையில், இந்த குமுதினி படகு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நிறுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் படகின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

படகு திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கடலுக்குள் இறக்குவதற்கான நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, படகுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஐந்து தடவை பரீட்சார்த்தமாக குமுதினி படகு இயக்கப்பட்டது.

படகினை மீள செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நேற்றைய தினம் படகினை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நிகழ்வு ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் 

படகினை இயக்கி குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு கொண்டுவரும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது.

படகை இயக்குவதற்கான பகீரத பிரயத்தன முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை. 

இதேவேளை படகின் செயலிழந்த இயந்திரப் பகுதி திருத்தப் பணிக்காக நீர்கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் குரூஸ் தெரிவித்ததுடன், 

தமது திணைக்கள நிபுணத்துவ குழுவின் பரிசோதனைக்குப் பின்னரே மீண்டும் படகுச் சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

குமுதினி படகு 1968ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு