வடமாகாண ஆளுநரின் சர்ச்சைக்குரிய கடிதம் கசிந்தது எப்படி? 5 பேருக்கு பொலிஸார் அழைப்பாணை...

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநரின் சர்ச்சைக்குரிய கடிதம் கசிந்தது எப்படி? 5 பேருக்கு பொலிஸார் அழைப்பாணை...

யாழ்.பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6 ல் மாணவி ஒருவரை இணைங்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாடசாலையைச் சேர்ந்த ஐவரை பருத்தித்துறைப் பொலிஸா  விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையில் மாணவி ஒருவரை தரம் 6ல்  இணைக்குமாறு வடமாகாண ஆளுநரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று பருத்தித்துறைப் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அனுப்பப்பட்டது.

குறித்த கடிதமானது நிர்வாக நடைமுறைகளை மீறி நேரடியாக பாடசாலை அதிபருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்தக் கடிதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் தோன்றின.

பாடசாலை மத்திய கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற நிலையில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வெட்டுப்புள்ளி தொடர்பில் மத்திய கல்வி அமைச்சு தீர்மானிக்க வேண்டும் என பதிலுக்கு அதிபர் வலையக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினார்.

இவ்வாறான நிலையில் மேற்படி கடிதம்  அடங்கிய செய்தி ஒன்றை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார் .

இந்நிலையில் பாடசாலைக்கு வந்த கடிதம் எவ்வாறு வெளியே சென்றது என சந்தேகம் அடைந்த அதிபர் குறித்த பாடசாலையின் இரண்டு பிரதி அதிபர்கள் உட்பட ஐந்து பேருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் ஏற்கனவே வெட்டுப்புள்ளி குறைவான ஒருவரை பாடசாலையில் நியமித்துள்ள நிலையில் தனக்கு எதிராக ஆளுநரிடம் சென்றபடியால் குறித்த மாணவியை சேர்க்கவில்லை என பாடசாலை நலன் விரும்பி ஒருவர் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது கடிதத்தை பாடசாலை அதிபரே வெளியில் கசிய விட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துவரும் நிலையில்  அதனால் அதிபர் முன்கூட்டியே பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக  முறைப்பாடு  பதிவு செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருப்பதாகத் கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு