ஒரு கிராமத்தில் தேங்கும் நீரை இன்னொரு கிராமத்திற்குள் விடுவதற்கு நிதி ஒதுக்கிய அமைச்சர் டக்ளஸ்..! பிரதேச செயலர், பொதுமக்கள் கருத்துக்களை மீறி அடாவடி..

ஆசிரியர் - Editor I
ஒரு கிராமத்தில் தேங்கும் நீரை இன்னொரு கிராமத்திற்குள் விடுவதற்கு நிதி ஒதுக்கிய அமைச்சர் டக்ளஸ்..! பிரதேச செயலர், பொதுமக்கள் கருத்துக்களை மீறி அடாவடி..

யாழ்.உரும்பிராய் வடக்கு வீதி புனரமைப்பிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கீடு செய்த நிதியில் பொதுமக்கள், பிரதேச செயலர் ஆகியோரின் கருத்துக்களை மீறி அடாவடியாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை வடிகால் அமைப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

அரசாங்கத்தின் ஒரு லட்சம் நிதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட உரும்பிராய் வடக்கு வீதியின் முறையற்ற வடிகாலமைப்பு தொடர்பில் அப்பகுதி சிவில் அமைப்புகள் பல்வேறு தரப்பினரும் 

தமது முறைப்பாட்டை வழங்கியிருந்தனர். இந்நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில் குறித்த வடிகாலமைப்ப தொடர்பில் பொதுமக்கள் தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

குறித்த வடிகாலமைப்பு மேற்கொள்வது தவறல்ல ஆனால் ஒரு கிராமத்து நீரை செயற்கையான கட்டுமானங்கள் ஊடாக பிறிதொரு கிராமத்தினுள் சேர்ப்பது தவறு என சுட்டிக் காட்டியதுடன் நீரை கடலுக்கு சென்றடையும் விதத்தில் வடிவமைப்பை மேற்கொள்ள வேண்டும் 

எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமல்லாது உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள மதகினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மூடி விட்டதாகவும் தற்போது இடைநடுவில் வடிகாலை மக்கள் வாழும் பிரதேசத்திற்கு திருப்புவது ஏற்புடையது அல்ல 

எனவும் சுட்டிக் காட்டியிருந்தனர். இவ்வாறான ஒரு கூட்டத்தில் எவ்விதமான தீர்மானங்களும் எட்டப்படாமல் குழப்பத்தில் கூட்டம் முடிவடைந்த நிலையில் பிரதேச செயலாளரினால் குறித்த கூட்டம் தொடர்பில் எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட சிவில் அமைப்புக்களுக்கு 

கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்விதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் முடிவடைந்த நிலையில் வெள்ளநீர் கிழக்கு பக்கமாக செல்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் 

வெள்ள நீர் தொடர்பில் மாற்றுத் திட்டம் முன்வைக்காத நிலையில் மாற்று திட்டத்தை முன்வைக்குமாறு பிரதேச செயலாளர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் 

பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடாமலும் மாற்று திட்டத்தினை முன்வைக்காமல் வடிகாலை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கோப்பாய் பொலிஸாரை அழைத்து அவர்களின் உதவியுடன் வடிகாலை அமைப்பதற்காகன கிடங்குகள் வெட்டப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். 

ஆகவே அரசாங்கத்தினால் மக்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன நிதிகளில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வண்ணம் திட்டங்களை மேற்கொள்வதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும். 

ஒரு கிராமத்தில் தேங்கும் நீரை இன்னொரு கிராமத்திற்குள் விடுவதற்கா? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கினார் என கேள்வி எழுப்பியிருக்கும் மக்கள், நிதியை ஒதுக்கினால் போதுமா? தான் ஒதுக்கிய நிதியில் என்ன நடக்கிறது என அவர் பார்ப்பதில்லையா?

எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு