ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுடன் மோதிய சரத் வீரசேகர அணி! - உபகுழு கூட்டத்தில் குழப்பம்

ஆசிரியர் - Admin
ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுடன் மோதிய சரத் வீரசேகர அணி! - உபகுழு கூட்டத்தில் குழப்பம்

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் வெளிநடப்பு செய்தனர்.

பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு இன்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை நடைபெற்றது. இதில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான சுமந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளான அருட்தந்தை இம்மானுவேல், சுரேன் சுரேந்திரன் மற்றும் தென்னிலங்கையின் இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது விசனமடைந்த இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் இராணுவத்தினரே யுத்தத்துக்கு பின்னரான மீட்பு பணிகளை முன்னெடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் அமைப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நிகழ்வில் சர்ச்சை நிலையும் தோன்றியது. நிகழ்வை நடத்தியவர்கள் சர்ச்சை நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதிலும் வாக்குவாதம் தொடர்ந்தது. இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு