நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா இம்முறை கோலாகலமாக..! திருவிழா ஒழுங்கமைப்பு கூட்டத்தின் பின்னர் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்...

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா இம்முறை கோலாகலமாக..! திருவிழா ஒழுங்கமைப்பு கூட்டத்தின் பின்னர் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்...

கடந்த 3 வருடங்களாக நடைபெற்ற நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாக்களைபோல் அல்லாமல் இவ்வாண்டு விமரிசையாக நடக்கும். அதாவது 2018ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்றதைபோல் சிறப்புற நடைபெறும் என மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். 

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் திருவிழா ஒழுங்கமைப்புக்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாநகரசபையில் இன்று இடம்பெற்றது. 

இந்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் 

வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது. அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. 

ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். 

அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து நகரை அடைய முடியும். 

ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின்போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும். முகக்கவசங்களை அணிவது சட்டமாக்கப்படவில்லை. இருந்த போதும் கொரோனா எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவேண்டும். 

ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ்.மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். 

இந்தக் கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர்,மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு