யாழ்.மாவட்டத்தில் 41 பதுக்கல் வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு..! ஆட்டக்காரி வியாபாரிகள் விலைக்கட்டுப்பாட்டை மதிப்பதேயில்லையாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 41 பதுக்கல் வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு..! ஆட்டக்காரி வியாபாரிகள் விலைக்கட்டுப்பாட்டை மதிப்பதேயில்லையாம்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2 கிழமைகளில் மட்டும் சுமார் 41 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் என்.விஜிதரன் கூறியுள்ளார். 

மாவட்ட செயலகத்தில் அரிசி கட்டுப்பாட்டு விலை மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டம் மாத்திரமல்ல இலங்கை பூராகவும் அரிசி கட்டுப்பாட்டு விலை தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது.

அமைச்சரவை மட்டத்தில் இதற்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

அரிசி அதிக விலைக்கு விற்றால் அதாவது அதற்கு அதிக தண்டம் மற்றும் நீதிமன்ற தண்டனை கூட உள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் எமது அதிகார சபையினர் கடமையாற்றி வருகின்றார்கள்.

குறிப்பாக இந்த மாதத்தில் முதலாம் திகதியிலிருந்து அரிசி சம்பந்தமாக 41வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிலும் கூடுதலாக கட்டுப்பாட்டு விலை என்று பார்க்கும் போது சிறிய கடைகளை நாங்கள் பெரிதாக பரிசோதிப்பதில்லை. மொத்த வியாபார நிலையங்கள் அரிசி ஆலைகளை நாங்கள் பரிசோதித்திருக்கின்றோம். 

அதனடிப்படையில் பெரும்பாலும் ஆட்டகாரி, மொட்டைகறுப்பன் என்ற அரிசி என்பது வடக்கு மாகாணத்தில் அதிகளவில் காணப்படுகின்றது. 

அதனை பொறுத்தவரை அதற்கு நிர்ணயம் இல்லை என்ற வகையில் அதற்கு கட்டுப்பாட்டு விலை என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை.

எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவ்வாறு எந்த விதமாகவும் குறிப்பிடப்படாதுள்ளதோடு சகல அரிசி வகைக்கும் அது பொருந்தும் என்ற ரீதியில் நாங்கள் சகல அரிசியையும் 

ஒரே விதமாகப் பார்க்க வேண்டியதாகவுள்ளது. ஆட்டக்காரி அரிசி உற்பத்தியாளர்கள் சரியான விலையினை தமது உற்பத்தி பொருளில் காட்சிப்படுத்துவதில்லை.

யாழ்.மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளின் மூன்றுக்கு மேற்பட்ட அரிசி ஆலைகளை பரிசோதித்திருக்கின்றோம். பரிசோதித்து விலை மாற்றம் தொடர்பிலான வழக்குகளை பதிவு செய்திருக்கின்றோம்.

அத்தோடு அவர்களின் அரிசி இருப்பு விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்திருக்கின்றோம்.

விலை மாற்றம் தொடர்பில் 2000 ரூபா விலை பொறிக்கப்பட்ட 10 ஆயிரம் 10 கிலோ அரிசி மூட்டைகள் காணப்பட்டமையினால், அத்தோடு விலை மாற்றம் தொடர்பில் மூன்று வழக்குகள் பதிவு செய்திருக்கின்றோம். 

பதுக்கல் தொடர்பில் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்தோடு கட்டுப்பாட்டு விலையை மீறியோருக்கு எதிராக 10 பேருக்கு வழக்கு பதிவு செய்திருக்கின்றோம்.

இவை உள்ளடங்களாக அரிசி சம்பந்தமாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு