ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை - விக்கி மனவருத்தம்!

ஆசிரியர் - Admin
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை - விக்கி மனவருத்தம்!

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பது மன வருத்தத்தைத் தருகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.     

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதனை எப்படிப் பார்க்கிறீர்கள்? என ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது மன வருத்தத்தைத் தருகிறது. உதாரணத்திற்கு எமது காணிகளை அரசாங்கம் தந்திரமாகவும் பலாத்காரமாகவும் கையேற்றல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒரு வேளை பல உண்மையான தரவுகளை விபரமாக அவர் எதிர்பார்த்திருக்கின்றாரோ நான் அறியேன். அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திற்கு முன்னர் இவை பற்றி முழு விவரங்களை நாம் சேகரித்து அனுப்ப வேண்டும்.

எனினும் பல முக்கிய விடயங்களை அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக மக்களை வேவு பார்ப்பது அவர்களை அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை மீறல் செயற்பாட்டாளர்களை, பத்திரிகையாளர்களை, காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினரைக் குறிவைத்து அவர்களை நீதிமன்றில் நிறுத்துவது போன்ற செயற்பாடுகள் தற்போது விரிவடைந்து மாணவர்களை, கல்வியாளர்களை, மருத்துவர்களை ஏன் மதத் தலைவர்களையும் அரசாங்கம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது என்பதைக் கூறியுள்ளார்.

இரண்டாவதாக நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் பற்றிப் பேசினால் போதாது நடைமுறையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்றுள்ளார்.

மூன்றாவதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை உடனே தற்காலிகமாக வேனும் செயலிழக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நான்காவதாக 2019 ஆண்டு ஈஸ்டர் ஞாயிறில் நடந்த குற்றங்கள் சம்பந்தமான சூத்திரதாரிகளை உடனே கண்டுபிடித்து உண்மையையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டும் என்றுள்ளார். இப்படி பல விடயங்களை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று பொருள்படக் கூறியுள்ளார்.

மேலும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் பேசி தொடர்ந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் அவசியமான செயற்பாடுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொறுப்புக்கூறல் சம்பந்தமான விசாரணைகளை உடனே நடத்த உரிய குழுவை அமைப்பதாகவும் அதற்கான நிதிகளை அங்கத்துவ நாடுகள் பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் கூறப்படாமல் விட்டாலும் தற்போதைக்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசாங்கமும் வேறு வழியின்றி அதற்கு அசைந்துள்ளது. பணம் தான் பிரச்சனை. அத்துடன் நாம் நடப்பவை பற்றிய உண்மை விபரங்களை பட்டியலிட்டு அவருக்கு அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம்.

அண்மையிலே தமிழ் தேசிய கட்சிகள் எல்லோரும் இணைந்து பேசி ஒருமித்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டுமென பேசியிருந்தோம். பின்னர் அதிலிருந்து இழுத்து இழுத்து செய்யாதிருந்ததால் இனியும் தாமதித்தால் காலம் தாமதித்து விடும் என்பதால் எஞ்சியிருந்த ஏனைய கட்சிகளை இணைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

எங்களுடைய அறிக்கை ஒருமித்து சென்றால் நல்லது தான். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அதனை செய்ய முடியாது போனாலும் மிகவும் முக்கியமானது நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்களுக்குள்ளே இருக்கிற பிரச்சினைகளுக்காக நாங்கள் அடிபட்டு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முழுமையான விடயங்களை வழங்க வேண்டும். இதிலே நாங்கள் இணைந்து செயல்பட்டால் நல்லது. அடுத்த தடவை இணைந்து செயற்படுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.

அதேவேளை, அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன். நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா என்பது நாடகமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு