தராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

ஆசிரியர் - Admin
தராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

2005ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

யாழ். ஊடக அமையம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், வொயிஸ் ஒப் மீடியா, அரங்கம் ஊடக நிறுவனம், இலங்கை இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணைந்த அனுசரணையுடன் ஏப்ரல் 28ஆம் திகதி இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இலங்கை அரசியலில் மக்கள் மயப்படவேண்டிய ஊடக மனோநிலை என்ற தொனிப் பொருளில் இம் முறை நடைபெறவுள்ள தராகி சிவராமின் நினைவு நிகழ்வில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அ.நிக்சன் உட்பட சிரேஸ்ட ஊடகவியலாளர்களும், சிவராமின் நெருங்கிய நண்பர்களும் உரையாற்றவுள்ளனர்.

அத்துடன், சிரேஸ்ட ஊடகவியலாளரும் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருபவருமான சண். தவராஜாவின் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற கட்டுரைத் தொகுப்பு நூலும் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், புதிய செய்தித் தளம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில், வடக்கு, கிழக்கு, தெற்கு, கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவராமுடன் இணைந்து பணியாற்றியவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிவராம் நிகழ்வையொட்டியதாக ஊடகம் – மக்கள் – அரசியல் என்ற தலைப்பில் அன்றைய தினம் காலை கல்லடியிலுள்ள ஊடகக் கற்கைகளுக்கான நிறுவனமான வொயிஸ் ஒப் மீடியாவில் ஊடகத்துறையில் தற்போது பணியாற்றுபவர்கள், புதிதாகப் பிரவேசிக்கவுள்ள புதியவர்களுக்குமான ஊடகப்பயிற்சிப்பட்டறையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தராகி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட தர்மரெட்ணம் சிவராம் கொழும்பில் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு