லண்டனில் தமிழருக்கு நடக்கும் கொடூரம்..!!

ஆசிரியர் - Admin
லண்டனில் தமிழருக்கு நடக்கும் கொடூரம்..!!

பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்த ஈழத்தமிழர் நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் இறுதி பகுதியில் தனது கடையைத் திறக்கும் போது கத்தியால் குத்தப்பட்டு ஈழத்தமிழரான ரவி கதிர்காமர் பலியாகி ஒரு சிலவாரங்களுக்குள் மற்றுமொரு ஈழத் தமிழரும் உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக பிரித்தானியாவில் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட இவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடைக்கு மாலை 3.20 மணி அளவில் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் கத்தியுடன் ஓடிச்சென்ற ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பயனின்றி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இறந்தவர் தமது கடைக்கு ஓடி வந்து கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் அரை மணி நேரம் கழித்தும் வெளியே வராத காரணத்தால் தாம் அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கடையின் பணியாளரான செல்வா நித்தி தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாகவும் உடனே பொலிசாருக்கும் நோயாளர் காவு வண்டிக்கும் தான் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடை உரிமையாளரான செல்வராஜா லோகானந்தன் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவியை வழங்கிய நிலையில் நோயாளர் காவு வண்டியின் பணியாளர்கள் அங்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

தமது சி.சி.டிவி கமராக்களை பொலிசார் பார்வையிட்டதாகவும் அதில் உயிரிழந்தவர் - காலில் இரத்தக் காயத்துடன் சாதாரணமாகவே நடந்து சென்றது பதிவாகியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் தமது கடைக்கு அருகிலுள்ள பலசரக்குக் கடையில் வேலைபார்த்து வந்தவரெனவும் எப்பொழுதும் தமது கடைக்கு வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருப்பார் எனவும் தெரிவித்துள்ள கடை உரிமையாளர் அவர் நல்ல மனிதன் என்றும் வன்முறைகளில் ஒருபோதும் ஈடுபடாதவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர் ஒரு ஈழத்தமிழர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை இவரது மரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது கத்தி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இன்னமும் அறியப்படவில்லை என்றும் வேறு வகையான ஆயுதங்கள் எவையும் சம்பவ இடத்துக்கு அருகில் காணப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு மைல்கள் தூரத்திலேயே நேற்றைய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை மற்றொரு தாக்குதலில் நேற்று இரவு ஸ்டேஷன் வீதியில் வைத்து 15 வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியுள்ளதாகத் தெரிவித்து பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பூங்காவொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவமும் இரண்டு மைல்களுக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது.

இதே சம்பவத்துடன் தொடர்புடையதாக 15 வயது பெண் பிள்ளையும் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் இவ்விருவரின் காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றும் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து தகவல்கள் எதுவும் அறியப்படின் தம்மோடு தொடர்புகொள்ளும்படி பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு