அரச, படை அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள்! - அமெரிக்கா குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
அரச, படை அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள்! - அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் காணாமல்போன தமது கணவன் குறித்து தகவல்களை கோரிய, பல பெண்கள் அரசாங்க அதிகாரிகளாலும் பாதுகாப்பு அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள 2018 இல் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த நீண்ட அறிக்கையில், யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிஉதவியை பெறமுயலும் வேளை பாலியல் துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல்போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுகின்றது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை.

சித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் அதனை தொடர்ந்து பின்பற்றுக்கின்றனர். குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக காவல்துறையினர் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்குகின்றனர்.

பெப்ரவரி 2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்த போதிலும் எனினும் கடந்த வருடம் இலங்கை அரசாங்கம் ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

காவல்துறையினர் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடு முழுவதும் பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணையகம் கடந்த யூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வின் போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களை போன்று யுத்தம் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பலவந்தமாக வாக்குமூலம் தங்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், சட்டத்தரணிகளையும் குடும்பத்தவர்களையும் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட சித்திரவதைகள் மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும் விடுதலையின் பின்னரும் தாங்கள் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிஸாரும் அளவுக்கதிகமான வன்முறைகளை பயன்படுத்துவதும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது. காணாமல்போன தமது கணவன் குறித்து தகவல்களை கோரிய பெண்கள் அரசாங்க அதிகாரிகளாலும் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளது என்றும் அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கை தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு