கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அல்லைப்பிட்டியில் இளைஞன் மீட்பு!!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் நேற்று முன் தினம் இரவு கழுத்து அறுக்கப்பட்டு வீதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர் வீதியால் சென்றவர்களால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அல்லைப்பிட்டியில் உள்ள வாடி வீட்டுக்கு அண்மையில் ஓர் இளைஞன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரம் வீழ்ந்து கிடந்துள்ளார்.
அந்த வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிச் சாரதி அதை அவதானித்துள்ளார். வீதியால் வந்த மற்றொரு முச்சக்கர வண்டிச் சாரதியும் இணைந்து அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த நோயாளர் காவு வண்டி இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தது.
சம்பவ இடத்தில் ஒரு சோடி செருப்புக்கள், ஈருளி என்பன திக்குத் திக்காக் கிடந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.