SuperTopAds

கனவாகிப் போகும் இந்தியாவின் உலகக் கிண்ண கால்பந்து கனவு!

ஆசிரியர் - Editor IV
கனவாகிப் போகும் இந்தியாவின் உலகக் கிண்ண கால்பந்து கனவு!

2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசியக் கிண்ணத்துக்கு இந்தியா தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, 2030 அல்லது 2034 ஆம் ஆண்டுக்கான, சர்வதேச கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது இந்தியாவைப் பொறுத்தவரை சாத்தியமற்றதாகியுள்ளது

அமைப்பு ரீதியான சிக்கல்கள் மற்றும் சீர்திருத்தங்களைச் செயற்படுத்தத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

1.45 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய நாடு, 2027 ஆசியக் கிண்ணத்துக்குத் தகுதி பெறத் தவறி, தரவரிசையில் 138-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உலகக் கிண்ணக் கனவு நனவாகும் வாய்ப்பு மேலும் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குராசோ மற்றும் கேப் வெர்டே போன்ற மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெற்ற நிலையில், இந்தியாவில் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டிற்கான ஆற்றல் வீணடிக்கப்படுகிறது என்றும் விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறுவர்கள் ஒரு பருவத்திற்கு 12 முதல் 15 கால்பந்தாட்ட ஆட்டங்களில் மட்டுமே விளையாடுகின்றனர்.

ஆனால், தென் கொரியா மற்றும் ஜப்பானில் சிறுவர்கள் 40-க்கும் மேற்பட்ட போட்டி ஆட்டங்களில் விளையாடுகிறார்கள்.

ப்

இந்தியாவைப் பொறுத்தவரை தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் குறைவாக இருப்பதுடன், பல மாநிலங்களில் இளைஞர் லீக் போட்டிகள் கூட நடத்தப்படுவதில்லை.

கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இந்தியாவில், மேற்கு வங்கம், கோவா, கேரளா, மிசோரம் மற்றும் மணிப்பூர் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கால்பந்து முன்னணி விளையாட்டாக உள்ளது.

அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு ஒரு சீரான தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்தப் போராடி வருகிறது.

இது கால்பந்தாட்ட கழகங்களின் வளர்ச்சிக்குப் பெரும் அடியாக அமைந்துள்ளது.

இந்த அமைப்பை சீர்செய்ய 4 வருடங்கள் செல்லும் என்ற நிலையில், உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியாவைப் பங்கேற்கச் செய்ய இன்னும் 20-25 வருடங்கள் செல்லும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஏலம் கோரியுள்ள நிலையில், இந்திய வம்சாவளி விளையாட்டு வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்கும் "விளையாட்டு கடவுச்சீட்டை" அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எனினும், பிற நாடுகள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய கால்பந்து விரைந்து செயல்படத் தவறினால் தற்போதைய நிலையிலேயே தொடர நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது