SuperTopAds

ஆமணக்கு விதையை உண்டதால் விபரீதம்! 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

ஆசிரியர் - Editor II
ஆமணக்கு விதையை உண்டதால் விபரீதம்! 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார். 

அதன் பின்னர் அந்த உணவை உண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 20 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளின் படி, குறித்த மாணவர் வழக்கமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்பது வழமையாக இருந்துள்ளது. 

எனினும், இன்று சூரியகாந்தி விதைகள் என நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் அவற்றுடன் சேர்த்து கொண்டு வந்துள்ளதாகவும், அவற்றை மாணவர்கள் உட்கொண்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்