SuperTopAds

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பயன்படுத்திய குடிநீர் தாங்கி , தற்காலிக மலசல கூடத்தை அகற்றிய பொலிஸ்

ஆசிரியர் - Editor II
பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பயன்படுத்திய குடிநீர் தாங்கி , தற்காலிக மலசல கூடத்தை அகற்றிய பொலிஸ்

யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற , பொழுது போக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால், வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். 

அதேவேளை குறித்த இடத்தில் குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து , சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பலாலி பொலிஸார் அறிவித்துள்ளனர். 

யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலா தளங்களில் பொதுச் சுகாதார வசதிகளைஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி  கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் , பலாலி பொது நோக்கு மண்டபம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடாத்தினர். எதிர்வரும் ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அப்பகுதியில் கொட்டகை அமைக்க பொலிஸார் தடை விதித்துள்ள நிலையில் , போராட்டக்காரர்கள் , குறித்த பொது நோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதுடன் , மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து உட்கொள்வதுடன் , அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும் , தற்காலிக மலசல கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனாலேயே பலாலி பொலிஸார் அவற்றை அங்கிருந்து அகற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வயோதிப பெண்கள் , முதியவர்கள் என போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் ,அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி பொலிஸார் எடுத்து சென்றமை அப்பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.