ஓயாத கண்ணீர் - உலகக் கோப்பை மேடையில் இருந்து அழுதுகொண்டே விடைபெற்ற தங்கமகன் லூகா மோட்ரிச்!

கால்பந்து விளையாட்டின் ஆகச்சிறந்த, ஆகப்பண்பான ஒரு மந்திரவாதியின் உலகக் கோப்பை பயணம் முற்றுப்புற்றுள்ளது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் குரோஷியா அணி 1-2 என்ற கணக்கில் போர்ச்சுகலிடம் வீழ்ந்து வெளியேறிய போது, ஒட்டுமொத்த மைதானமும் ஒரு வீரரின் கண்ணீருக்காக உறைந்து நின்றது. அவர்தான் குரோஷியாவின் அசைக்க முடியாத கேப்டன், லூகா மோட்ரிச்.
தனது 40ஆவது வயதில், தனது கடைசி உலகக் கோப்பை நாக்-அவுட் ஆட்டத்தின் இறுதி விசிலைக் கேட்டதும், மோட்ரிச் மைதானத்தில் முழங்காலிட்டு தலையை கைகளால் மூடி அழுத காட்சிகள் எத்தனையோ ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைத்திருக்கும்.
5 உலகக் கோப்பை தொடர்களில் (2006, 2014, 2018, 2022, 2026) குரோஷியா தேசத்தின் பெருமையை உலகறியச் செய்த அந்த மாபெரும் தலைவனுக்கு, அவனது கடைசி உலகக் கோப்பை ஆட்டம் ஒரு வெற்றிக் கொண்டாட்டமாக அமையாமல் போனதுதான் கால்பந்தின் ஆகப்பெரிய துயரம்.
ஆட்டம் முடிந்ததும், ரியல் மாட்ரிட் கிளப்பில் நீண்ட காலம் அவரோடு இணைந்து விளையாடிய போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஓடிவந்து மோட்ரிச்சை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய அந்த நொடிகள், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீர் மல்கச் செய்தது.
‘நாங்கள் ஒரு சிறிய நாடு, ஆனால் எங்களிடம் ஒரு பெரிய இதயம் இருந்தது."
லூகா மோட்ரிச் (முந்தைய உலகக் கோப்பை பேட்டி ஒன்றில்)
சுமார் 40 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாட்டை, தனது மாயாஜால மிட்ஃபீல்ட் ஆட்டத்தால் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரை (2018) அழைத்துச் சென்று உலகையே வியக்க வைத்தவர் மோட்ரிச். அவர் உலகக் கோப்பையை வெல்லாமல் போயிருக்கலாம், ஆனால் கால்பந்து உலகைக் கடந்த ஒரு தசாப்த காலமாகத் தனது ஆளுமையால் வென்றுள்ளார்.
40 வயதிலும் அணியை 90 நிமிடங்களும் ஓடி ஓடி வழிநடத்திய அந்த உழைப்பும், ஆட்டம் முடிந்ததும் அந்த ஜெர்சியை முகத்தில் மூடிக்கொண்டு அவர் சிந்திய கண்ணீரும், குரோஷியாவின் ஒரு 'தங்கத் தலைமுறையின்' இறுதி அத்தியாயம் என்பதை உணர்த்தியது.
விளையாட்டின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கால்பந்து வரலாறு எழுதும் போதெல்லாம் லூகா மோட்ரிச்சின் பெயர் 'விடாமுயற்சியின்' அடையாளமாக என்றென்றும் நிலைத்திருக்கும்.




