வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலத்தால் வந்த புதுச் சிக்கல்!
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றுத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்தினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளும் நிலைக்கு அனந்தி சசிதரன் தள்ளப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அமைச்சர் அனந்தி சசிதரன் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கணேஸராசா, தனது கட்சிக்காரருக்கு குற்றப் பத்திரம் ஆங்கில மொழியில் வழங்கப்பட்டுள்ளது. அவரால் ஆங்கிலம் வாசிக்கவோ, படிக்கவோ தெரியாது என்று ஆட்சேபனை எழுப்பினார்.
அப்போது, வழக்கை விசாரித்த நீதியரசர்கள், “அனந்தி சசிதரனின் கையெழுத்துடன், உங்களால் (சட்டத்தரணி) நீதிமன்றுக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்கிலத்திலேயே உள்ளது. அவரால் தமிழில் பதிலி சமர்பிக்கப்படவில்லையே? ஆங்கிலம் தெரியாது என்றால் எப்படி பதிலியை ஆங்கிலத்தில் சமர்பித்துள்ளார்.
இந்த மன்று அவருக்கு இதற்கு முன்னர் ஆங்கிலத்தில் கட்டளைகள் அனுப்பியுள்ளது. அதன்போது ஆங்கிலம் தெரியாது என்ற ஆட்சேபனை எழுப்பப்படவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், அந்த ஆட்சேபனையையும் நிராகரித்தனர்.
இதன்போது மனுதாரரான டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, அனந்தி சசிதரனால் ஆங்கிலம் வாசிக்கவோ, படிக்கவோ தெரியாது என்று சமர்ப்பித்த ஆட்சேபனையை மன்றில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அனந்தி சசிதரன் ஆங்கிலத்தில் உரையாற்றிய காணொலி மன்றில் சமர்பிக்கப்படும் என்றும், ஆங்கிலம் தெரியாது என்று கூறி நீதிமன்றத்தை அவமதித்துள்ள அவருக்கு எதிராக மற்றொரு வழக்கை தாக்கல் செய்யப் போவதாகவும், சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோ தெரிவித்தார்.