SuperTopAds

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: கால அவகாசம் நிறைவடைவதால் வர்த்தமானி மீளப்பெறப்பட்டு யாழ். மேல் நீதிமன்ற வழக்கு முடிவுறுத்தம்!

ஆசிரியர் - Editor II
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: கால அவகாசம் நிறைவடைவதால் வர்த்தமானி மீளப்பெறப்பட்டு யாழ். மேல் நீதிமன்ற வழக்கு முடிவுறுத்தம்!

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை  நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரின் விசாரணை குழு தன் மீது விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளியான வர்த்தமானி தொடர்பில் மன்னார் நகர சபைத் தவிசாளரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதன்போது, எதிர் மனுதாரர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கில மற்றும் சிங்கள மொழியாக்கங்களில் 'நகர சபை' என்பதற்குப் பதிலாக 'மாநகர சபை' எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழியில் அது சரியான முறையில் வெளியிடப்பட்டுள்ளதை மன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மேலும், சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு மூன்று மாத கால அவகாசமே காணப்படுகின்றது. அந்தச் சட்டபூர்வமான கால அவகாசம் நாளை 4ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. 

எனவே, விசாரணைகளை முழுமையாக நடத்தி முடிப்பதற்குப் போதிய கால அவகாசம் இல்லாமையைக் கருத்திற்கொண்டு, குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்குப் எதிர்மனுதாரர்கள் தரப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரச சட்டவாதி மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

அதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படுவதாக மன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அரச சட்டவாதியின் இந்த அறிவித்தலையடுத்து, மனுதாரர் தரப்புச் சட்டத்தரணியின் இணக்கத்துடன் குறித்த வழக்கானது நீதிமன்றத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.