யாழ்.குப்பிளானில் திருடர்களைத் தலைதெறிக்க ஓட வைத்த விழிப்புக்குழு, பொலிஸார்
யாழ்.குப்பிளான் தெற்குப் பகுதியில் இன்று வியாழக்கிழமை(13) அதிகாலை இடம்பெற்ற திருட்டு முயற்சி விழிப்புக்குழுக்கள் மற்றும் சுன்னாகம் பொலிஸாரின் ஒன்றிணைந்த செயற்பாட்டால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குப்பிளான் தெற்குப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள திருட்டுக்களைக் கட்டுப்படுத்த குப்பிளான் வடக்குப் பகுதியையும் சேர்த்து நான்கு வெவ்வேறு பகுதிகளில் விழிப்புக் குழுக்கள் இரவுநேரக் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றன.
வீரமனைப் பகுதியில் கடமையில் ஈடுபட்டு வரும் விழிப்புக் குழுவினருடன் இணைந்து இரண்டு சுன்னாகம் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குப்பிளான் மிந்திரை வீதியில் இன்று அதிகாலை-03 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் இரு திருடர்கள் செல்வதாக விழிப்புக்குழுவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வீரமனைப் பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸாரும், விழிப்புக்குழுவினரும் சில நிமிடங்களுக்குள் குறித்த பகுதிக்கு வேகமாக விரைந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு அண்மையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த விழிப்புக் குழுவினரும், சுன்னாகம் பொலிஸாரும் ஏற்கனவே அப்பகுதிக்கு விரைந்த நிலையில் வீரமனைப் பகுதியிலிருந்து சென்ற விழிப்புக் குழுவும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் நடாத்தினர். இதனையடுத்துத் திருடர்கள் அங்கிருந்து தலைதெறிக்கத் தப்பியோடியுள்ளனர்.
விழிப்புக் குழுவினரும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து குப்பிளான் தெற்குப் பகுதியில் திருட்டு முயற்சியினை முறியடித்தமையை ஊர்மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.