SuperTopAds

ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு; பதவி விலகிய குருநாகல் மாநகர சபை NPP உறுப்பினர்

ஆசிரியர் - Editor II
ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு; பதவி விலகிய குருநாகல் மாநகர சபை NPP உறுப்பினர்

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை நேற்றைய தினம் புதன்கிழமை குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்துவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

மாநகர சபைக்குள் இடம்பெறும் முறையற்ற செயற்பாடுகளைத் தடுக்க முடியாமையே தனது பதவி விலகலுக்குக் காரணம் எனத் தெரிவித்து, தனது கடிதத்தில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படல்.

எரிபொருள் பயன்பாட்டில் முறைகேடுகள் மற்றும் தேவையற்ற மேலதிக நேர (OT) கொடுப்பனவுகள் வழங்கப்படல்.

ஊழியர்கள் சேவைக்கு வருகை தந்ததாகப் பதிவிட்டுவிட்டு, பணி நேரத்தில் இடையில் வெளியேறுதல்.

நகரைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறியமை மற்றும் பொதுச் சேவைகளில் காணப்படும் மந்தகதி.

ஊழல் மற்றும் வீண் விரயங்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அந்த நிர்வாகக் கட்டமைப்பில் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் போட்டியிட்ட பி.டபிள்யூ. பிரேமச்சந்திர, அங்கு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.